நெல்லையில் பயங்கரம்.. பள்ளிக்குச் சென்று வந்த 5 வயது குழந்தை வெட்டிக் கொலை
நெல்லை: நெல்லை பேட்டை பகுதியில் குடும்ப தகராறு காரணமாக 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி, பேட்டை, சுந்தரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் 38. இவரது மனைவி பிரேமா (32). இவர்களுக்கு கல்பனா (12), தருண்மாடசாமி (5) என்ற குழந்தைகள் உள்ளனர்.
பிரேமா, தமது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்துவைத்தார். ஆறுமுகத்தின் மனைவி கலா கர்ப்பிணியாக இருந்தார். அவர் ஆறுமுகத்தின் நடத்தையில் சந்தேகப்பட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். கலா பிரிந்துசென்றதற்கு, பிரேமாதான் காரணம் என ஆறுமுகம், பிரேமா குடும்பத்தினர் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில், பிரேமாவின் ஐந்து வயது மகன் தருண்மாடசாமி பள்ளி முடித்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது ஆறுமுகம் அந்த சிறுவனை சரமாரியாக வெட்டினான்.
படுகாயமடைந்த சிறுவன் தருண் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தருண் உயிரிழந்தார். இந்த பரிதாப சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி ஆறுமுகத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.