ஆந்திராமழையால் பாலாற்றில் வெள்ளம்: வேலூர், காஞ்சியில் சேதம் அதிகரிப்பு
காஞ்சிபுரம்: ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தரைப்பாலங்கள் சேதமடைந்த காரணத்தால் வேலூர் - அரக்கோணம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஆந்திர மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து தமிழகம் நோக்கி வெள்ளம் கரைபுரண்டு வந்து கொண் டிருக்கிறது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் தமிழக எல்லையில் நுழையும் பாலாறு 222 கிமீ பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் அருகே வயலூர் கிராமப்பகுதியில் கடலில் கலக்கிறது. பாலாற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 20 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வேலூரில் வெள்ளம்
வேலூர் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல ஏரிகள் நிரம்பின. சில பகுதிகளில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆம்பூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையின் காரணமாக பாலாற்றுப் பகுதியில் குறைந்த அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. தற்போது ஆந்திர மாநிலத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நேற்று முன்தினம் முதல் பேரணாம்பட்டை ஒட்டியுள்ள பத்தலபல்லி மலட்டாற்றில் அதிக அளவு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
போக்குவரத்து துண்டிப்பு
அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆம்பூர் பச்சகுப்பம் பாலாற்றில் கலந்தது. பாலாற்றில் சிறிதளவே சென்ற தண்ணீர், மலட்டாற்றுத் தண்ணீர் வந்ததால் பச்சகுப்பம் பகுதியில் வெள்ளமாக கரைபுரண்டு ஓடியது. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பச்சகுப்பம் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது.
பாலங்கள் சேதம்
தரைப்பாலம் பாலாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஆம்பூரில் இருந்து பச்சகுப்பம் வழியாக குடியாத்தம் செல்லும் வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. அதிக வெள்ளத்தின் காரணமாக, கல்லாறு பாலம் கடும்சேதமடைந்துள்ளது. இதன்காரணமாக, அப்பாலம் வழியான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆறுகளில் வெள்ளம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த மழையால், அங்குள்ள நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளி யேறி வருகிறது. பாலாறு மற்றும் அதன் கிளை நதிகளான வேகவதி, கிளியாறு, ஓங்கூர் ஆறு, செய்யாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலாற்றில் வெள்ளம்
இந்நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஆந்திர மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து தமிழகம் நோக்கி வெள்ளம் கரைபுரண்டு வந்து கொண்டிருக்கிறது.
தற்போது பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தடுப்பணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன்காரணமாக, காவேரிப்பாக்கம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டுள்ளது.
20 கிராமங்களுக்கு எச்சரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் உள்ள பெரும்பாக்கம், முசரவாக்கம், விஷார், செவிலி மேடு, தேனம்பாக்கம், விப்பேடு, வாலாஜாபாத், வில்லிவாக்கம், புளியம்பாக்கம், வெள்ளப்பாக்கம், அவளூர், களக்காட்டூர், ஆத்தூர், பாலூர், கீழ்பேரமனல்லூர், வளத் தோட்டம் உள்பட 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏரிகளுக்கு நீர்வரத்து
பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பெரும் பாக்கம், விஷார், செவிலிமேடு, களக்காட்டூர், வளத்தோட்டம், தேனம்பாக்கம், ஆசூர், கீழ்பேர மனல்லூர், அவளூர், வில்லி வலம், வல்லப்பாக்கம், புளியம் பாக்கம் ஆகிய 12 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில், பாலாற்றிலிருந்து கால்வாய் கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஏரிகளில் அவளூர் ஏரி நிரம்பி கரைகள் உடைந்தும் மற்ற சில ஏரிகளில் உபரி நீரை வெளியேற்றியும் வருகிறது.
20 கிராமங்களுக்கு பாதிப்பு
ஏற்கெனவே, மதுராந்தகம் ஏரி நிரம்பி கிளியாற்றில் 21 ஆயிரம் கனஅடியில் உபரி நீர் வெளியேறி ஈசூர் அருகே பாலாற்றில் கலந்து வரு கிறது. இதனால், ஈசூர் பகுதி யிலிருந்து வயலூர் வரை வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கிளியாற்றின் தண்ணீரும் சேர்ந்து, கரையோரங்களில் உள்ள 20 கிராமங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தரைப்பாலம் உடைப்பு
இரும்புலிச்சேரி தரைப்பாலம் ஆற்றில் இறங்கி சேதமடைந்ததால் போக்குவரத்து தடைபட்டது. இதனால் 5 ஆயிரம் மக்கள் தீவில் சிக்கியது போல முடங்கியுள்ளனர். இரும்புலிச்சேரி பாலத்தின் அருகே, போக்குவரத்துக்காக தற்காலிகமாக மண் பாதை அமைக்கப்பட்டது. தற்போது பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை காரணமாக அப்பணி நிறுத்தப் பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 24 மணி நேரம் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் 044-27237207, 27237107 ஆகிய தொலைபேசி எண்களில் குறைகளை தெரிவிக்கலாம். இதுதவிர, தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் கூடுதலாக ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 9445051077, 7299435270, 7401764105 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மதுராந்தகம் ஏரி நீர் திறப்பு
மதுராந்தகம் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேறி வருகிறது. நீரின் வரத்து அதிகரித்ததால் படிப்படியாக உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு நேற்று முன்தினம் 18 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இந்த அளவை மேலும் அதிகரித்து 21 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கிளியாற்றில் தற்போது 5 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதால் கரையோரப்பகுதியில் வசிக்கும் 13 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.