கனவிலும் தண்ணீர்.. தூங்க முடியாமல் தவிக்கும் சென்னை மக்கள்... தீராத மன அழுத்தத்தில் சிக்கித் தவிப்பு
சென்னை: தெனாலி படத்தில் தண்ணீரைக் கண்டாலே பயம் எனக்கு என கமல் ஒரு டயலாக் பேசுவார். தற்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் மனநிலையும் அப்படித்தான் இருக்கிறது.
கடந்த வாரம் பெய்த கனமழையில் சென்னை மாநகரே கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர்.
வீட்டைச் சுற்றிலும் வெள்ளம், வீடு மூழ்கி விடுமோ என்ற அச்சம், காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு என கடந்த வாரம் கலவையான மனநிலையில் சிக்கிக் கொண்டனர் சென்னை மக்கள்.
காலத்தின் கட்டாயம்...
சுற்றுலா செல்லும் போது கூட படகுகளில் பயணம் செய்ய பயப்படுபவர்கள் கூட, கழுத்தளவு நீரில் நடந்து வந்து படகில் ஏற வேண்டிய நிர்பந்தம். பல இடங்களில் கயிறுகள் மூலம் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மக்கள் மீட்கப் பட்டனர்.
அதிரடி சம்பவங்கள்...
சினிமாவைப் போல் அதிரடியாக அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் மக்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். தாங்கள் ஆசை ஆசையாக, சிறுகச் சிறுக சேர்த்து வாங்கிய பொருட்களெல்லாம் நீரில் அடித்துச் செல்லப் பட்டது அவர்களது மன அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.
குழந்தைகளின் மனநிலை...
பெரியவர்களின் கண்ணீரைக் கண்டு பயத்தில் மேலும் பாதிக்கப்பட்டது குழந்தைகள் தான். நிலைமை என்னவென்று புரியாவிட்டாலும், ஏதோ ஆபத்து என்பது மட்டும் அவர்களுக்கு நன்றாக புரிகிறது.
ஞாபகம் வருதே...
பல இடங்களில் இயல்பு நிலைமை திரும்பி மீண்டும் தங்கள் வீடுகளுக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். எப்போதும் நடந்தும், வாகனங்களிலும் சென்ற சாலைகளில் படகுகளில் பயணித்த அனுபவம் அப்போது அவர்களது மனதில் நிழலாடுகிறது.
மன அழுத்தம்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தைப் போலவே, மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது என்பது அவர்களது பேச்சுக்களின் மூலமே தெரிகிறது. எப்படி இந்தப் பாதிப்பில் இருந்து மீளப் போகிறோம் என்ற கலக்கம் அவர்களிடம் காணப்படுகிறது.
தூக்கமில்லா இரவுகள்...
வெள்ள சேதத்தை மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர். இரவுகளில் தூக்கம் இல்லாமல் அவதிப் படுவதாகவும், கண்களை மூடினாலே வெள்ளம் சூழ்ந்த காட்சிகள் தான் நினைவுக்கு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
கவுன்சிலிங் தேவை...
வாய் விட்டு கதறி அழ முடியாமல், அவர்கள் உள்ளுக்குள்ளேயே மருகி வருகின்றனர். எனவே அவர்களுக்கு மற்ற நிவாரண உதவிகளைப் போலவே, மன நல கவுன்சிலிங்கும் தேவையானதாகவே உள்ளது.
சிறப்பு முகாம்கள்...
மனநல மருத்துவர்கள் தங்களின் தனிப்பட்ட முயற்சியால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட மக்களின் வாழும் மக்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து கவுன்சிலிங் தந்தால் நலமாக இருக்கும்.