வெள்ள சேத ஆய்வறிக்கை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் - மத்திய குழு தலைவர் தகவல்
கடலூர்: தமிழகத்தில் மழை வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட பிறகு மத்திய குழுவின் ஆய்வு அறிக்கை அடுத்த வாரத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று அக்குழுவின் தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து மத்திய உள்துறை செயலாளர் பிரசாத் தலைமையிலான 9 பேர் கொண்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று மாலை 3 மணி முதல் ஆய்வு பணிகளை தொடங்கியது.
முதலில் மேற்கு தாம்பரம் சேவாசதன் பள்ளி முகாமில் தங்கியிருந்தவர்களை மத்திய குழுவினர் சந்தித்து, வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அடுத்து மேற்கு தாம்பரம் கிஷ்கிந்தா சாலை, பாப்பன் கால்வாய், அடையாறு ஆற்று பகுதிகளை பார்வையிட்டனர். தாம்பரம் சிடிஓ காலனி பகுதிக்கு சென்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக 6 அடிக்கு தண்ணீர் தேங்கி நின்றது. தற்போது ஓரளவு தண்ணீர் வடிந்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தாம்பரம், வேளச்சேரி, சேலையூர்,ராஜகீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சேதமடைந்த சாலைகள், பாலங்கள், ஏரி உள்ளிட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். வேளச்சேரி ரயில் நிலையம் முன் பகுதியில் உள்ள உயரமான பாலத்தில் இருந்தபடி, வேளச்சேரி ராம்நகர் பகுதியை பார்வையிட்டனர். இதன் பின்னர் முதல் நாள் ஆய்வை முடித்துக்கொண்டன்ர்.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரசாத், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசின் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறோம்.
ஆய்வறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வோம். அதனடிப்படையில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும். அடுத்த வாரத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும. ஆய்வு முடிவுக்கு பிறகுதான் சேத மதிப்புகள் குறித்து முழுமையாக கூறமுடியும். பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் சேதங்கள் அதிகமாக உள்ளது. உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட வீடுகள், விவசாய நிலங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications