மயிலாப்பூரில் புகுந்த அடையாறு வெள்ளம்: ஊர்ந்து சென்ற ஜெ. கார்
சென்னை: வரலாறு காணாத மழை வெள்ளம் மயிலாப்பூர் பகுதியையும் விட்டு வைக்கவில்லை. அடையாறு ஆற்றின் வெள்ளநீர் மயிலாப்பூரில் புகுந்துள்ளதால் 31 ஆண்டுகளுக்கு பின் வெள்ளம் சூழ்ந்துள்ளது. விவேகனந்தா கல்லூரி, சமஸ்கிருத கல்லூரிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ராதாகிருஷ்ணன் சாலையிலும் வெள்ளநீர் ஆறாக ஓடத்தொடங்கியுள்ளதால் வெள்ளத்தை பார்வையிடச் சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்றது.
வரலாறு காணாத மழையால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவி்ற்கு சென்னையில் மழை கொட்யது. கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் வௌ்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அடையாறு,சைதாப்பேட்டை,தாம்பரம்,முடிச்சூர் என்று நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.அத்தியாவசிய உணவுப் பொருட்களான பால், பிஸ்கெட் கூட கிடைக்காமல் பெரும்பாலான மக்கள் தவித்து வருகின்றனர்.

பால் விநியோகம் முடக்கம்
சென்னையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அம்பத்துார் பால் பண்ணை மூடப்பட்டது. சாலைகள் சேதத்தால் வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பால் சென்னைக்கு வரவில்லை. வியாசர்பாடி, மாதவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் பால் விநியோகம் முற்றிலும் முடங்கியது. மாத பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆவினில் பால் விநியோகிக்கப்படுகிறது.

கடைக்காரர்கள் கொள்ளை
ஒருலிட்டர் பால் 150க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அட்டை வைத்துள்ளவர்களுக்கு பால் கொடுக்காமல் பிளாக்கில் விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேபோல 20லிட்டர் தண்ணீர் கேன் 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

அடையாறு ஆற்று வெள்ளம்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட 30000 கனஅடி வெள்ளநீரும், மழை வெள்ளநீரும் சேர்ந்து அடையாறில் பெருக்கெடுத்த காரணத்தால்,
சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கே.கே.நகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது

மயிலாப்பூரில் வெள்ளம்
இன்று காலைவரை மயிலாப்பூரில் மழை பெய்த அடையாளமே இல்லாத அளவிற்கு முக்கிய சாலைகள் சுத்தமாக காணப்பட்டன. இந்த நிலையில் திடீரென அடையாறு ஆற்று வெள்ளம் பக்கிங்காம் கால்வாய் வழியாக மயிலாப்பூரில் புகுந்தது. இதனால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடானது.

தீவாக மாறிய மயிலாப்பூர்
சமஸ்கிருத கல்லூரி, விவேகானந்தர் கல்லூரிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பிரதான சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 1984ம் ஆண்டுக்கு பிறகு இப்பொழுது தான் மயிலாப்பூரில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

படகு சவாரி
பிரதான சாலையான ராயப்பேட்டை சாலையில் படகுப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் படகில் மீட்க கேட்கும் பணம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசு சார்பில் படகு அனுப்பிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வெள்ளத்தில் முதல்வர் வாகனம்
போயஸ்கார்டனில் இருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட இன்று சென்ற முதல்வர் ஜெயலலிதா 3 மணிநேரம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு 11 மணிக்கு திரும்பினார். அப்போது ராதாகிருஷ்ணன் சாலையில் ஆறாக கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரில் முதல்வரின் வாகனம் சிக்கியது. முதல்வரின் வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்றது.

உயரும் நீர்மட்டம்
மயிலாப்பூரில் கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் கைலாசபுரம், அம்பேத்கார் பாலம் அருகே வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்புகளுக்குள் மழை நீருடன், கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசிவருகிறது. வெள்ளம் எப்போது வடியுமோ என்று எதிர்பார்த்து வரும் நிலையில் நேரம் செல்லச் செல்ல நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் வெளியேறி பள்ளிகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications