தொடர் மழையால் பூ விளைச்சல் பாதிப்பு... 5 மடங்கு விலை உயர்வு!
கரூர்: கரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு பெய்து பெய்துவரும் தொடர்மழையினால் பூ விவசாயத்தில் விளைச்சல் குறைந்துள்ளது.

400 ஏக்கரில் பூ விவசாயம்
மாயனூர், காட்டூர், உள்ளிட்ட 10 ற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பாளையம், லந்தக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 ஏக்கரில் மல்லிகை, முல்லை அரளி, சம்பங்கி, துளசி, மருவு, செண்டுமல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகை பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன.

மலர் விவசாயத்தை நம்பி விவசாயிகள்
வருடம் முழுவதும் லாபம் தரக்கூடிய தொழிலாக மலர் விவசாயத்தை விவசாயிகள் நம்பிக்கையுடன் செய்து வருகின்றனர். வழக்கமாக ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்கள் கோடை காலம் என்பதால், பூக்களின் விளைச்சல் அமோகமாக இருக்கும். ஆனால் விலையோ மிகக்குறைவாக இருக்கும்

கோடை மழையால் விளைச்சல் பாதிப்பு
ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் கத்திரி வெயிலிலும், கடந்த 15 நாட்களாக அவ்வப்போது தொடர்ந்து அதிக மழை பெய்து வருகிறது. இதனால் பூக்களின் விளைச்சல் மிகக்குறைவாகவே உள்ளதாக விவசாயிகள் தெவிக்கின்றனர்.

பூக்கள் தேவை அதிகரிக்கும் காலமிது…
அது மட்டுமில்லாமல் சித்திரை, வைகாசி மாதங்களில் அம்மன் கோயில்கள், பெருமாள் கோயில்கள் என பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் திருவிழா காலம் என்பதாலும் வைகாசி மாதத்தில் சுபமுகூர்த்த தினங்கள் உள்ளதாலும் பூக்களின் தேவை அதிகரிக்கும்.

தொடர் மழையால் வரத்து குறைவு
ஆனால் கடந்த 15 நாட்களாக கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பெய்து வந்த தொடர்மழையால் பூக்களின் வரத்து குறைந்து, தேவை அதிகம் ஏற்பட்டதால் பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகமாக விற்கப்பட்டது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு…
கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதாவது மழைபெய்யாத முன்னர் ஒரு கிலோ மல்லிகை ரூ 60, முல்லை ரூ 50, சம்பங்கி ரூ 30 என விற்பனையானது.

4 முதல் 5 மடங்கு விலை உயர்வு
ஆனால் இப்போது ஒரு கிலோ மல்லிகை ரூ 300, முல்லை ரூ 200, சம்பங்கி ரூ 80, ஹைபிரிட் சம்பங்கி ரூ 60, கோழிக்கொண்டை ரூ 50, மருவு ரூ 60 என விற்கப்படுகிறது.

“செண்ட் ஆலை குளிர் பதன கிடங்கு வேண்டும்”
இப்பகுதியில் செண்ட் ஆலை, குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்றும், அப்போது தான், பூக்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது தங்களுக்கு அதிக இழப்பு ஏற்படாது என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உயரும் என கணிப்பு
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் மல்லிகை விலை ரூ 400 லிருந்து ரூ.600 வரை கூட தாண்ட வாய்ப்புள்ளதாகவும் பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

குவியும் மக்களே விவசாயிகளுக்கு ஆறுதல்
பூக்கள் விலை 5 மடங்கு உயர்தது அதிர்ச்சியளித்தாலும், பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கும் பொதுமக்கள் எண்ணிக்கை மட்டும் எண்ணவோ குறையவில்லை என்பது தான் விவசாயிகளுக்கு சற்று ஆறுதலான செய்தி...












Click it and Unblock the Notifications