மீண்டும் தலையெடுக்கும் கந்துவட்டி... பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை
கோவில்பட்டி:கோவில்பட்டியில் கந்து வட்டி கடன் தொல்லை காரணமாக பூ வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி புதுக்கிராமம் எம்.ஜீ.ஆர்.நகரைச் சேர்ந்த காசிபுலவர் மகன் முத்துகிருஷ்ணன். இவருடைய மனைவி ஜோதி, இவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.

வழக்கம்போல, இன்று காலை முத்துகிருஷ்ணன் வேலாயுதபுரத்தில் உள்ள தனது பூக்கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவரது மனைவி ஜோதி கடைக்கு சென்ற போது கடையின் உள்பகுதியில் முத்துகிருஷ்ணன் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஜோதி அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார், முத்துகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கடந்த 18ம் தேதி முத்துகிருஷ்ணன் தனக்கு கடன் கொடுத்தவர்கள் தன்னை தொடர்ந்து தொல்லை படுத்தி மிரட்டி வருவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த முத்துகிருஷ்ணன் கந்துவட்டி கடன் தொல்லையால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications