ஜிகுஜிகுஜிகுஜிகு.. ஓடும் ரயிலில் ஒரு ஸ்வீட் ஹனிமூன்!
ஓடும் ரயிலில் ஹனிமூன் கொண்டாடியுள்ளனர் வெளிநாட்டு தம்பதியினர்.
Recommended Video
சென்னை: இது ஒரு ஹனிமூன் செய்தி.
கப்பலில் ஹனிமூன், ஆகாயத்தில் பறந்தபடி ஹனிமூன் என எல்லாத்தையும் பார்த்தாச்சு. ஹனிமூன் என்றாலே கணவன்-மனைவி மட்டும் சம்பந்தப்பட்டது. ஆனா இந்த ஹனிமூன் சற்று வித்தியாசமானது. இந்த ஹனிமூன் செய்தியில் கொள்ளு தாத்தாவெல்லாம் வருகிறார்!
முன்பெல்லாம் ஹனிமூன் என்றால், ஊட்டி, கொடைக்கானல் செல்வார்கள். இப்போவெல்லாம் ஸ்விட்சர்லாந்து, லண்டன் என ஹனிமூன் ஸ்பாட் வெளிநாட்டு இடங்களாக மாறிட்டு வருது. ஆனால் இங்கே ஒரு வெளிநாட்டு தம்பதி, நம்ம ஊட்டிக்கு ஹனிமூன் கொண்டாட வந்திருக்காங்க. அதை எப்படி கொண்டாடினாங்க அப்படின்றதுதான் மேட்டரே!
கிரகாம்-சில்வியா
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிரகாம். இவர் ஒரு இன்ஜினியர். போலந்து நாட்டை சேர்ந்தவர் சில்வியா. இவர் ஒரு ஆராய்ச்சி மாணவி. இவங்க ரெண்டுபேரும் அந்த புது கல்யாண ஜோடி! கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் இங்கிலாந்தில் கல்யாணம் ஆகியிருக்கு. கல்யாணம் ஆனாலும் ஹனிமூன் போவது என்னவோ ஊட்டிக்குத்தான் என இருவரும் முடிவெடுத்து கொண்டனர்.
தாத்தாவுக்கு பிடித்த ரயில்
தம்பதியின் இந்த முடிவுக்கு காரணம் இருந்தது. அது என்னவென்றால், 100 வருஷத்துக்கு முன்னாடி, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிவரை மலை ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக இருப்புப்பாதையும் போடப்பட்டது. இந்த பணியை செய்தது அப்போது ஊட்டியிலேயே குடியிருந்த பிரிட்டிஷ் மக்கள்தான். இந்த இருப்புப்பாதையை போட்ட பணியில் முக்கிய பங்கு வகித்தது நம்ம கல்யாண மாப்பிள்ளை கிரகாமின் கொள்ளு தாத்தாவாம்! அது மட்டுமில்லை... அந்த தாத்தாவுக்கு இந்த மலைரயில் பயணம் ரொம்ப பிடிக்குமாம். அதனால இந்த ரயிலில் அடிக்கடி போய் வருவாராம்!
என் தாத்தா போட்ட பாதை
''உலகில் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் ஊட்டி ரயிலில் வந்து செல்கிறார்கள். அதேபால எத்தனையோ தம்பதிகள் ஹனிமூனை ஊட்டியில் அனுபவித்துள்ளார்கள். என் தாத்தா போட்ட பாதையில் செல்லும் ரயிலில்தான் எங்களுக்கு ஹனிமூன் உட்பட எல்லாம்" என்று கறாராக சொல்லிவிட்டார் மாப்பிள்ளை.
3 லட்சம் ரூபாய் டிக்கெட்
அதோடு, புது மணப்பெண் சில்வியாவை ஒரு நீராவி ரயில் பயணத்தில்தான் முதல்முறையாக பார்த்ததாகவும், அதனால்தான் ஹனிமூனுக்கு அதே நூற்றாண்டு பழமை வாய்ந்த சிறப்பு மலைரயிலை தேர்வு செய்தோம் என்றும் கூறினார். அதோடு தாங்கள் மட்டும்தான் அந்த ரயிலில் பயணம் செய்ய போகிறோம் என்றும் கூறிவிட்டார். ஊட்டி சிறப்பு ரயில் ஒருநாளைக்கு ஒருமுறை மட்டும் இயக்கப்படும். அதனால் எப்பவுமே கூட்டம் வழிந்து நிறையும். இதற்காக மற்ற பயணிகள் யாரும் ஏறிடக்கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த டிக்கெட்டையும் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டார். இந்த ஹனிமூனுக்காக முழு ரயிலையும் இங்கிலாந்திலேயே ரிசர்வ் செய்துவிட்டார் நம்ம மாப்பிள்ளை
2 மட்டுமே பயணம்
இந்த புதுஜோடியின் ஹனிமூனுக்காக மேட்டுப்பாளையத்தில் காலை 9 மணிக்கு சிறப்பு ரயில் தயாராக வந்து நின்றது. நீராவி மூலம் இயங்கும் அந்த மலைரயிலை பார்த்ததுமே இந்த ஜோடிக்கு சந்தோஷம் தாங்க முடியலை. மொத்தமாக இருந்ததே 3 பெட்டிகள்தான். 153 பேர் பயணம் செய்யக்கூடிய ரயிலில் 2 பேர் மட்டும் பயணம் செய்து ஹனிமூன் கொண்டாட ஆரம்பித்தனர். காலை 9 மணிக்கு கிளம்பிய அந்த பிற்பகல் 3 மணிக்கு வந்து சேர்ந்தது. கணவனும், மனைவியும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசியபடி, பசுமை நிறைந்த மலையின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தவாறே வந்தனர். கேமரா மூலம் புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து கொண்டனர்.
ஊட்டி அழகா இருக்கு
அவர்கள் ஊட்டி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதும் ரயில்வே அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர். ஊட்டியின் சிறப்பு பற்றியும் தம்பதிக்கு எடுத்து சொன்னார்கள். அதற்கு அவர்களும், "ஊட்டி ரொம்ப அழகா இருக்கு. நிறைய பள்ளத்தாக்குகள், வழியில் நிறைய குகைகள் இருக்கு. ரெயிலின் ஜன்னல் வழியாக கண்ட இயற்கை காட்சிகள் எங்களை மெய்மறக்க வைத்தது. அப்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதும், சில இடங்களில் சாரல் மழை பெய்ததும் எங்களால் எப்பவும் மறக்கவே முடியாது. மலைரயில் மட்டுமில்லை, நீலகிரி மலையும் ரொம்ப அழகாகவே இருக்கு." என்றனர்.
இதுதான் முதல்முறை
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறும்போது, இது இங்கிலாந்து தம்பதிக்கென்று ரயில்வே துறையின் சிறப்பான ஏற்பாடு கிடையாது. பேக்கேஜ் முறையிலும் சிறப்பு மலைரயில் இயங்கி வருகிறது. முறையான அனுமதியோடு, உரிய பணம் செலுத்தி டிக்கெட் வாங்கி கொண்டால் யார் வேணும்னாலும் இப்படி தனியா பயணிக்கலாம். ஆனால் ஹனிமூனுக்காக ரயிலை முன்பதிவு செய்தது இதுதான் முதல்முறை என ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
தாத்தா மேல் பிரியம்
சாதாரணமாகவே ஹனிமூன் என்பது ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத நிகழ்வு. ஹனிமூன் என்பது கணவன்-மனைவி மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்று. என்றாலும், தான் கண்ணால் பார்த்திராத இறந்துபோன தாத்தா மேல் உள்ள பிரியத்தால்.. அவரது உழைப்பால் உருவான இருப்புப்பாதையில்.. அவர் பலமுறை பயணம் செய்த இந்த நூற்றாண்டு மலை ரயிலை தேடி வந்து ஹனிமூன் கொண்டாடிய இந்த தம்பதி பற்றி அறிந்த நீலகிரி மக்கள் தங்களின் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை நேரில் தெரிவித்தனர்!