சட்டசபை தேர்தலில் கூடுதலாக 61.20 லட்சம் பேர் வாக்களிப்பு... யாருக்கு போட்டிருப்பாங்க?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தாலும், வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2011 சட்டசபை தேர்தலை விட, 61.20 லட்சம் பேர், இம்முறை கூடுதலாக வாக்களித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த 61.20 லட்சம் பேர் யாருக்கு வாக்களித்திருப்பார்கள் என்பதுதான் இப்போது அரசியல் தலைவர்களின் கேள்வியாக உள்ளது. ஏனெனில் இவர்கள் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யக்கூடியவர்கள்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவை தேர்தல் கமிஷன் ஒத்திவைத்தது. இதைத்தொடர்ந்து 232 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக 65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் 74.26 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி. இது கடந்த லோக்சபா தேர்தலை விட அதிகம் அதே நேரத்தில் கடந்த 2011 சட்டசபை தேர்தலை விட குறைவுதான். கடந்த 2011 சட்டசபை தேர்தலில், 78.12 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. அந்த தேர்தலில், 3.67 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.

வாக்காளர்களின் எண்ணிக்கை
வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தாலும், ஓட்டு போட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலின் போது, 4.70 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

4.28 கோடி வாக்காளர்கள்
2014 லோக்சபா தேர்தலில், வாக்காளர் எண்ணிக்கை, 5.50 கோடியாகவும், 2016 சட்டசபை தேர்தலில், 5.82 கோடியாகவும் அதிகரித்தது. நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், 4.28 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்து உள்ளனர்.

61.20 லட்சம் வாக்காளர்கள் அதிகம்
2011 சட்டசபை தேர்தலை விட, 61.20 லட்சம் வாக்காளர்கள், இம்முறை கூடுதலாக ஓட்டளித்து உள்ளனர். இதில், தபால் ஓட்டு சேர்க்கப்படவில்லை. தபால் ஓட்டுகள், 6 லட்சம் உள்ளன. பதிவாகும் தபால் ஓட்டுகளை சேர்க்கும் போது, வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் அதிகரிக்கும்.

லோக்சபா தேர்தலை விட அதிகம்
2014 லோக்சபா தேர்தலைவிட, இம்முறை ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்து உள்ளது. லோக்சபா தேர்தலில், 3.67 கோடி பேர் ஓட்டளித்தனர். அதாவது, 73.68 சதவீதம். அதை விட தற்போது, 23.18 லட்சம் வாக்காளர்கள், கூடுதலாக ஓட்டளித்து உள்ளனர்.

யாருக்கு வெற்றி?
வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்த போதும், ஓட்டு போட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூடுதலாக பதிவான ஓட்டு யாருக்கு கிடைத்துள்ளது என்பது தெரியாததால், அரசியல் கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர்.

தூக்கம் தொலைத்த தலைவர்கள்
வெற்றி நமக்குத்தான் என்று அனைவருமே நம்பினாலும் எக்ஸிட் போல் வெளியாகி ஏராளமான அரசியல் தலைவர்களின் தூக்கத்தை தொலைத்திருக்கிறது. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று தைரியமாகவே மக்களின் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

நாளை ரிசல்ட்
இந்த தேர்தலில் 6 முனை போட்டி நிலவினாலும் திமுக - அதிமுக இடையே போட்டி கடுமையாக இருப்பதால், வெற்றியை கணிக்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து வேட்பாளர்களும் கலக்கத்துடனும், தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் மாணவர்கள் போல ஆவலுடன் உள்ளனர். நாளை நடப்பதை காண பொதுமக்கள் ஆவலுடனும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications