முன்னாள் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் சஸ்பெண்ட்: அண்ணா பல்கலை பதிவாளர் அதிரடி

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2008ம் ஆண்டு ஜூனில் பொறுப்பேற்றவர் மன்னர் ஜவஹர். அவரின் பதவிக் காலம் 2011 ஜூனுடன் முடிந்தபோதும், அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவரது நீட்டிக்கப்பட்ட பதவிக் காலம் 2012, ஜூன் 26 அன்று முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து அவர் பேராசிரியராக பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 2009 முதல் 2012 வரையிலான கல்வி ஆண்டுகளில் பரீட்சையில் தோல்வி அடைந்த முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் வசதி படைத்தவர்கள் சிலருக்கு மறு மதிப்பீடு செய்து, கூடுதல் மதிப்பெண் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கஸ்தூரி, ராமையன் முன்னாள் கூடுதல் தொழில் கல்வி இயக்குனர் எட்வின் சந்திரமோனி ஆகியோரை கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
முன்னாள் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் சொன்னதை கேட்டுதான் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தமிழ்பொறை, சிவக்குமார், மணி ஆனந்த் ஆகியோர் விசாரணைக்குழுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். மன்னர் ஜவஹரை விசாரிக்க உயர்நிலை குழு அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது மன்னர் ஜவஹர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் பிறப்பித்துள்ளார். பணியில் இருந்து வியாழக்கிழமை ஓய்வு பெறும் நிலையில் மன்னர் ஜவஹர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னர் ஜவஹர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதிவாளார் கணேசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications