ரூ.40 லட்சம் மோசடி: முன்னாள் ராணுவ வீரர் கைது
சேலம்: சேலம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான தேமுதிக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி பேரூராட்சி பகுதி தே.மு.தி.க. செயலாளர் செல்வராஜ். இவரது வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர் முன்னாள் ராணுவ வீரர் மாதையன். நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து மேச்சேரியில் 5 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு நடத்தினர்.
ஆரம்பத்தில் ஒழுங்காக சீட்டு நடத்திக்கொண்டிருந்தவர்கள் போகப்போக சீட்டு எடுத்தவர்களுக்கு முழுமையாக பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். ஆனால், சீட்டு தொகைக்கு வசூலான பணத்தில், மேச்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி போட்டுள்ளனர். ஆனால், பொதுமக்கள் எடுத்த சீட்டுக்கு பலமுறை கேட்டும், பணம் தராமல் இழுத்தடித்து ஏமாற்றி விட்டனர்.
பொதுமக்களிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேச்சேரி, சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த ஃபோட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் புகழேந்தி, அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஜெயக்குமார், சண்முகம், பச்சியப்பன், ஜெயராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவுபடி, கடந்த ஜனவரி, 9-ம் தேதி, மேச்சேரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சீட்டு பணம் மோசடி செய்ததாக செல்வராஜ், மாதையன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில், ஏலச்சீட்டு நடத்தி பணம் தராமல் மோசடி செய்தது தொடர்பாக, முன்னாள் இராணுவ வீரர் மாதையனை புதன்கிழமை கைது செய்த- மேச்சேரி போலீஸார், தலைமறைவான செல்வராஜை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications