அதிமுகவில் சேர்கிறார் பேராசிரியர் பொன்னுசாமி: மெய்யா? பொய்யா?
திருச்சி: முன்னாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் பொன்னுசாமி அதிமுகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி, ஏ.புதுப்பட்டி கிராமம், நவலக்குடியைச் சேர்ந்தவர் பேராசியர் பொன்னுசாமி. அவர் முன்பு அதிமுக ஆட்சியில் துணை சபாநாயகராகவும், கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார்.
தனக்கு தேர்தலில் அதிமுக தலைமை சீட் வழங்கவில்லை என்ற காரணத்தினால் பொன்னுசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து திடீரென விலகி திமுகவில் இணைந்தார். அங்கு அவர் மு.க. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அவருக்கு தீர்மானக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பில் மருங்காபுரி தொகுதி மணப்பாறை தொகுதியாக மாற்றப்பட்டது. மணப்பாறை தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பொன்னுசாமி எதிர்பார்த்தார். ஆனால் தொகுதி பங்கீட்டில் அப்போது கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அத்தொகுதி ஒதுக்கப்பட்டதால், பொன்னுசாமி கடும் விரக்தியடைந்தார். இதையடுத்து திமுகவிலிருந்து விலகினார். அத்துடன் மணப்பாறை தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கினார்.
இந்த நிலையில் மருங்காபுரியை மையமாக கொண்டுள்ள மணப்பாறை தொகுதியில் வெள்ளாளர் சமுதாய வாக்குகள் அதிக அளவில் உள்ளது என்பதாலும், மேலும் இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்னுசாமிக்கு இன்றளவும் நல்ல செல்வாக்கு உள்ளதாலும், அவரை அதிமுக பக்கம் இழுக்க சிலர் மறைமுகமாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகின்றது.
காரணம், கரூர் தொகுதியை உள்ளடக்கிய மணப்பாறை மற்றும் விராலிமலை போன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை பெரும்பாலான பகுதியில் பொது மக்கள் மறித்து பிரச்சனை செய்த வண்ணம் உள்ளனர்.
இதனால் பொன்னுசாமியை அதிமுக பக்கம் இழுத்து இந்த பகுதி வாக்குகளை அதிமுக பக்கம் கொண்டு வர அவருக்கு அசைன்மென்ட் கொடுத்துவிட்டால் இந்த பகுதியில் அதிமுக அதிக வாக்குகளை பெறும் என அதிமுக முன்னணி நிர்வாகிகள் நம்புகின்றனர். இந்த தகவல் அதிமுக தலைமை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பேராசியர் பொன்னுசாமி அதிமுகவில் இணைவது குறித்து வெளியாகும் தகவலை, அவர் தரப்பில் இருந்து மறுத்து மறுப்பு அறிக்கையும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கரூர் தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வரும் போது, பேராசிரியர் பொன்னுசாமி அதிமுகவில் ஐக்கியம் ஆகலாம் என கூறப்படுகின்றது.
ஆனால், அதிமுகவில் பேராசியர் பொன்னுசாமி கண்டிப்பாக சேரமாட்டார் என்று ஒரு தரப்பும், இல்லை இல்லை அவர் நிச்சயம் சேர்ந்துவிடுவார் என்று மற்றொரு தரப்பும் பெட்டிங் கட்டி வருகின்றார்களாம். இதில் கூடவா பெட்டிங் ராசாக்களா .... என பொது ஜனம் தலையில் அடித்துக் கொள்கின்றது.