கேரள முதல்வரை கண்டித்து பெரியாறு அணை மீட்புக் குழுவினர், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேனி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரியாறு அணை மீட்புக் குழுவினர், வழக்கறிஞர் சங்கம், மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் லோயர்கேம்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டம் 141.65 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கிய நாளிலிருந்தே கேரள முதல்வர் உம்மண் சாண்டி அணை குறித்து தேவை இல்லாத கருத்துகளை தெரிவித்து மக்களை குழப்பி வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து உச்சநீதிமன்றம் 142 அடி தண்ணீர் தேக்த தீர்ப்புக்கூறிய பின்னும் அணை பலவீனமடைந்துள்ளது என்று கூறும் கேரள முதல்வர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரியும், அணை பாதுகாப்பில் உள்ள கேரள போலீஸாரை மாற்றி மத்திய பாதுகாப்பு படையை நிறுவ வேண்டும், அணை பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதால், பெரியாறு அணைக்கென தனியாக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு அவர் கண்காணிப்பில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பெரியாறு அணை மீட்புக்குழுவினர், வழக்கறிஞர் சங்கத்தினர், கூடலூர் அனைத்து விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு லோயர்கேம்பில் உத்தமபாளையம் டிஎஸ்பி கண்ணன் தலைமையில் ஏராளமான போலீஸார்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications