கள்ளக் காதலால் விபரீதம்- 3ம் வகுப்பு மாணவனை ஆற்றில் மூழ்கடித்து கொன்ற 4 பேர் கைது
திருப்பூர்: திருப்பூரில் குடும்பப் பிரச்சினைக்காக 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை ஆற்றில் மூழ்கடித்துக் கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்கரசவலை பஞ்சாயத்து வைத்தியங் குட்டையை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் மனைவி பத்மாவதி. இவர்களுக்கு ஆதிகேசவன், அபிநயா என இரு குழந்தைகள். இதில் ஆதிகேசவன் பேரநாயக்கன்புதுார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான். குடும்பப் பிரச்னை காரணமாக பத்மாவதி குழந்தை அபிநயாவுடன் மோடூர்பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உக்கரம் காவிலிபாளையத்தை சேர்ந்த குமரேசனுக்கும், பத்மாவதிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென பத்மாவதிக்கு மனமாற்றம் ஏற்பட்டது. கணவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் கடந்த 9 ஆம் தேதி பத்மாவதிக்கு போன் செய்து, "நீ உன் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தால் நான் உன் மகனை கடத்திக் கொன்று விடுவேன்" என மிரட்டியுள்ளான். ஆனால் தன்னுடைய முடிவில் மாற்றமில்லை என பத்மாவதி கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி மாலை 4:30 க்கு பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஆதிகேசவனை குமரேசனும், அவரது நண்பர்களும் காரில் கடத்தி காவிலிபாளையத்துக்கு அழைத்து சென்று பவானி ஆற்றில் மூழ்கடித்து கொன்றுள்ளனர்.
பள்ளிக்கு சென்ற குழந்தை திரும்பி வராதது குறித்து தேவூர் போலீசில் புகார் செய்த பத்மாவதி, குமரேசனின் கொலை மிரட்டல் தொடர்பாகவும் கூறியுள்ளார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் மாணவனை கடத்திய குமரேசன் கொலை செய்து ஆற்றில் வீசியது தெரிந்தது. இதையடுத்து பவானி ஆற்றில் மாணவனின் சடலத்தை சேவூர் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் சிறுவனின் உடல் சிவியார்பாளையத்தில் கரை ஒதுங்கியது. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற சத்தியமங்கலம் போலீசார் சடலைத்தை மீட்டனர். பின்னர் விசாரணைக்காக சேவூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து குமரேசன், சண்முகசுந்தரம் ஆகியோர் போத்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் நேற்று மாலை சரணடைந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சத்தி அருகே காரப்பாடியில் பதுங்கியிருந்த இரவி, கார்த்தி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications