சேலத்தில் தனியார் பேருந்து மீது வேன் மோதிய விபத்து – 2 மாணவர்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி
வாழப்பாடி: சேலத்தில் தனியார் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் நங்க வள்ளி அருகே உள்ள என். பழக்காரனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன் விவசாயி. இவரது குலதெய்வமான அய்யனாரப்பன் கோவில் பெரம்பலூர் மாவட்டம் எழும்பூர் கிராமத்தில் உள்ளது.
குலதெய்வ கோவிலில் பேரக்குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க இவர் தனது குடும்பத்தினருடன் 2 வேன்களில் என்.பழக்காரனூரில் இருந்து பெரம்பலூர் புறப்பட்டனர்.
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அந்த வேன்கள் சேலம் மாவட்டம் வாழப்பாடி பைபாஸ் ரோட்டில் கிழக்குக்காடு மேம்பாலத்தில் சென்றபோது ஒரு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சென்னையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த தனியார் பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் என்.பழக்காரனூர் கிராமத்தை சேர்ந்த சண்முகத்தின் மனைவி சித்ரா, சிவபெருமாள் மகன் பிரபு , பழனியப்பன் மகன் செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பழனியப்பனின் இன்னொரு மகன் லட்சுமணன் இறந்து போனார். இதைத்தொடர்ந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து நடந்ததும் வேன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை வாழப்பாடி போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வேனுக்கு பின்னால் வந்த இன்னொரு வேனில் வந்த முத்தையனின் உறவினர்கள் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்து உறவினர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கிய தனியார் பஸ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த பஸ் ஆகும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் சென்னையில் உண்ணாவிரதம் இருந்து விட்டு இந்த பஸ்சில் ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது. பஸ்சில் இருந்த ஊழியர்கள் உயிர் தப்பி விட்டனர்.
விபத்தில் இறந்த பிரபு, லட்சுமணன் ஆகியோர் 10 ஆம் வகுப்பு மாணவர்கள். செல்வகுமார் 12 ஆம் வகுப்பு மாணவர் ஆவார்.












Click it and Unblock the Notifications