மாஞ்சாநூல் பட்டம் பறக்கவிட்டவர்களை பிடிக்க 4 தனிப்படை.. கடைகளிலும் போலீஸ் ரெய்டு
சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மாஞ்சா நூல் பட்டம் பறக்கவிட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: அனகாபுத்தூர் பகுதியில் மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் உயிரிழந்ததையடுத்து மாஞ்சாநூல் பட்டம் பறக்கவிட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர். அனகாபுத்தூர் பகுதியில் மாஞ்சா நூல் விற்கப்படுகிறதா என்றும் போலீசார் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் நேற்று தனது தந்தையுடன் சேலையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தாம்பரம் - அனகாபுத்தூர் இருகே சென்றபோது சாலையின் குறுக்கே கிடந்த மாஞ்சா நூல் சிவப்பிரகாசத்தின் கழுத்தை பதம் பார்த்தது. இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த அடைந்த அவரது தந்தை சந்திரசேகர் மருத்துவமனயில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாஞ்சாநூல் பட்டம் பறக்கவிட்டர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அனாகபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் மாஞ்சாநூல் விற்கப்படுகிறதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில் மாஞ்சா நூல் விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாஞ்சா நூல் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.