ஈரோடில் சாதாரண செம்பு பாத்திரத்தை இரிடியம் என கூறி விற்க முயன்ற 5 பேர் அதிரடி கைது
செம்பு பாத்திரத்தை இரிடியம் என கூறி விற்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
ஈரோடு: சாதாரண செம்பு பாத்திரத்தை இரிடியம் என கூறி விற்பனை செய்ய முயன்ற வார இதழ் செய்தியாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டை சேர்ந்த சிட்டிபாபு சிங்கிடம் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை வீட்டில் வைத்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
இவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவர் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் செம்பு பாத்திரத்தை இரிடியம் என விற்பனை செய்ய முயற்சித்ததாக ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த பாரதிராஜா, அவிநாசியை சேர்ந்த முத்துராமலிங்கம் சத்தியமங்கலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், திருச்செந்தூர் விஜயன், கன்னியாகுமரி செல்வராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய செம்பு பாத்திரம் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் தீவிர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பாரதிராஜா போலீஸ் பார்வை என்ற வார இதழில் செய்தியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.