பல மாதமாக வழங்காததால் இலவச பொருட்கள் சேதம்... பொதுமக்கள் புலம்பல்
நெல்லை: நெல்லை அருகே இலவச பொருட்களை வழங்காமல் பல மாதங்களாக இருப்பு வைத்தததால் அவை சேதமடைந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.
தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மிக்சி, பேன், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது. வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அனைவருக்கும் இலவச பொருட்களை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக அனைத்து மாவட்டங்கலிலும் பள்ளிகள் மற்றும் நுகர்வோர் கூடங்களில் இலவச பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் 55 வார்டுகளை கொண்ட நெல்லை மாநகராட்சியில் பெரும்பாலான வார்டுகளுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டு விட்டன.
தச்சநல்லூர் மண்டலத்தில் 4வது வார்டுக்கு உட்பட்ட மேகலிங்கபுரம், உடை.யார்பட்டி, செல்வி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வார்டுகளுக்கு வழங்குவதற்காக 4 ஆயிரம் மிக்சி, பேன் உள்ளிட்ட பொருட்கள் ஸ்ரீரெங்கன் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் வைக்கப்பட்டு சுமார் 5 மாதம் ஆகி விட்டதால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகள் கரையான் அரித்து கீழே சரிந்து விழுந்துள்ளன. இதில் மிக்சி, பேன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சேதம் அடைந்து கிடக்கின்றன.
ஏற்கனவே இலவச பொருட்கள் வாங்கி சென்ற சில மாதங்களிலேயே பழுதாகி விடுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் தற்போது பழுதான பொருட்களை பொதுமக்கள் தலையில் கட்ட அதிகாரிகள் திட்டமிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications