செமையா இருக்கு சார் கிளைமேட்.. 1ம் தேதி முதல் கனமழை பெய்யப் போகுதாம்!
வடகிழக்குப் பருவமழையால் வரும் ஒன்றாம் தேதி முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்குப் பருவமழையால் வரும் ஒன்றாம் தேதி முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எதிர்ப்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் கடுமையான வறட்சி ஏற்பட்டது.
ஆனால் தென் மேற்பருவ மழை கைகொடுத்ததால் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை சமாளிக்க முடிந்தது. தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பைவிட அதிகம் பெய்ததால் தமிழக நீர் ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன.
இயல்பைவிட அதிக மழை பெய்யும்
இந்நிலையில் தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கினாலும் பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்யும் என கூறப்படுகிறது.
மேலடுக்கு சுழற்சி
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஓரிரு இடங்களில் கனமழை
இதனால் இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
1ஆம் தேதிக்குப் பிறகு கனமழை
சென்னையில் விட்டு, விட்டு மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பருவத்தில் வட கிழக்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடகிழக்குப் பருவமழையால் வரும் ஒன்றாம் தேதிக்குப் பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம்
மேலும் கனமழை பெய்யும் என்பதை 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பாகதான் கணிக்க முடியும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். ஆகையால் புயல் வெள்ளத்தால் சென்னை மூழ்கும் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.