நேர்மை, எளிமை, வெளிப்படையான ஆட்சி: இது தமாகாவின் தேர்தல் உறுதிமொழி
சென்னை: தமிழத்தில் எளிமை, நேர்மை, வெளிப்படையான ஆட்சியை மது இல்லாத தமிழகத்தை மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக - தமாகா மட்டுமே அளிக்க முடியும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் தேமுதிக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தேனாம்பேட்டையில் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், தேர்தல் உறுதிமொழி என்ற பெயரில் 43 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி, த.மா.கா. இணைந்த வெற்றிக்கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளதாகவும் கூறினார்.
இளைஞர்கள், மாணவர்கள், புதிய வாக்காளர்கள் அனைவரும் புதிய ஆட்சி அமைய வேண்டும் என எண்ணுகிறார்கள். அவர்கள் விரும்பும் ஆட்சியை எங்கள் கூட்டணியால் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறிய அவர், தேர்தல் அறிக்கையில் உள்ள சில முக்கிய அம்சங்களை பட்டியலிட்டார்.
•நேர்மையான, எளிமையான, வெளிப்படையான மதுவில்லாத தமிழகத்தை உருவாக்குவோம்
•காவல்துறையில் சீரமைப்பு
• விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
•உணவு, உறைவிடம் , கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
•மது இல்லாத மாநிலத்தை மநகூ - தேமுதிக - தமாகா கூட்டணி உருவாக்கும்
•மாணவர்களுக்கு எளிமையான முறையில் கல்விக்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
•இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க தமாகா வலியுறுத்தும்
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், வாக்காளர்களின் எதிர்பார்ப்பை தமாகா பூர்த்தி செய்யும் என்றும் கூறினார்.