ஜெ. மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு.. ஜி.ராமகிருஷ்ணன் அஞ்சலி
ஜெயலலிதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஜி. ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜி. ராமகிருஷ்ணனின் இரங்கல் செய்தி:
ஜெயலலிதா அவர்களுக்கு தலைசிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மறைந்தார் என்ற செய்தி தமிழக மக்களுக்கு மட்டுமல்ல தேசத்து மக்களுக்கே ஒரு அதிர்ச்சியாக உள்ளது. மாநில முதல்வர் ஜெயலலிதா திரைப்படத் துறையில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி அதிமுகவில் சேர்ந்து எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு மக்கள் செல்வாக்கோடு முதலமைச்சாராக பதவி ஏற்றார்.

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்திருக்கிறார். அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு பின்னர், முதல்வராக பதவியில் இருக்கும் போதே மறைந்திருக்கிறார். இம்மாநிலத்து மக்கள் பிரச்சனையான நதி நீர் தாவா பிரச்சனையாக இருந்தாலும், வேறு எந்த பிரச்சனையாக இருந்தாலும், நெஞ்சுறுதியோடு பிரச்சனையை எதிர் கொண்டவர். மாநில மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்.
எம்.ஜி.ஆர். தொடங்கி நடத்திய சத்துணவுத் திட்டத்தை சிறப்பாக நடத்தி காட்டியவர். தமிழக மக்களின் பேராதரவோடு ஆட்சி அமைத்த அவரின் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை பிரிந்து வாழக் கூடிய லட்சோப லட்ச அதிமுக தொண்டர்களுக்கு சிபிஎம் கட்சியின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் மறைவிற்கு சிபிஎம் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications