இது இட்லியா இல்லை கல்லா? பாத்ரூம் ஏன் அப்படி கிடக்கு? அரசு மருத்துவமனையை அலறவிட்ட ககன் தீப் சிங்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு உணவு வராததாலும் கழிப்பறை சுத்தம் இல்லாததாலும் அதிகாரிகளை சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் கடிந்து கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் 1968 ஆம் ஆண்டு பிறந்தவர். பிஇ (இசிஇ) படித்துள்ளார். பின்னர் 1991 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துறையில் இந்திய பொறியியல் சேவைகள் பிரிவில் தேர்வானார். 1993 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்றார்.

ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானவுடன் தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மதுரை, கன்னியாகுமரி, கடலூர் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழக குடிநீர் விநியோகத்தின் இயக்குநர், ஊரக வளர்ச்சி துறையின் செயலாளராக நியமிக்கப்பட்ட ககன்தீப் சிங், 2016ஆம் ஆண்டு முதல் தமிழக வேளாண் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2003, 2004 இல் கன்னியாகுமரி, கடலூர் மாவட்டங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சுற்றுலா திட்டங்களை கொண்டு வந்தார். 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலின் போது கடலூர் மாவட்ட மக்களை மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டார். சுனாமியால் வீடிழந்தவர்களை தங்கவைப்பது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்தவர்.
2013 ஆம் ஆண்டு வருவாய் துறை மூலம் மக்களின் குறைகளை தீர்க்க அம்மா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார். அது போல் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது பெற்றார். 2015 ஆம் ஆண்டு கடலூரில் வெள்ள பாதிப்பின் போது இவர் ஆற்றிய தொண்டு சிறப்பானது.
கடந்த 2015-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் சென்னையிலிருந்து வீட்டை விட்டு கடலூருக்கு புறப்பட்டார். அப்போது ஒரு மாதம் தொடர்ந்து கடலூரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். பிறகு கடலூரில் மழை நின்றுவிட்டது என கருதி சென்னைக்கு காலையில் சென்றார். ஆனால் கடலூரில் மழை மீண்டும் தொடங்கியது.
இதனால் காலையில் சென்ற ககன்தீப் அன்று மதியமே கடலூர் திரும்பினார். குடும்பத்தினரை விட்டுவிட்டு மக்கள் சேவையாற்ற வேண்டும் என ஒரு சில அதிகாரிகளுக்குத்தான் மனம் வரும் அந்த ஒரு சிலரில் ககன் தீப் சிங்கும் ஒருவர். அதிகாரிகளிலேயே வித்தியாசமானவர்.
இதன் பிறகு 2017ஆம் ஆண்டு கோவை அருகே சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து பலியான சம்பவத்தை விசாரணை நடத்தும் பொறுப்பையும் ஏற்றார். கஜா புயலின் போதும் மக்கள் பணியாற்றினார். 2020ஆம் ஆண்டு வேளாண்துறை செயலாளராக இருந்த போது வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க அரும்பங்காற்றியவர்.
கடந்த ஆண்டு நிவர் புயல் சென்னை அருகே கரையை கடந்த போது கடலூரில் பெய்த கனமழையால் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. இதை பார்வையிட அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கடலூர் சென்றார். அங்கு வேட்டியை மடித்துக் கொண்டு வயலில் எடப்பாடியார் இறங்கிய போது தனது பேன்ட்டை முட்டி வரை மடித்துவிட்டுக் கொண்டு பாதிப்பு குறித்து எடப்பாடியாருக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
இவர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சுகாதாரத் துறை செயலாளராக மாற்றப்பட்டார். அன்று முதல் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு வருகிறார்களா,அரசு ஊழியர்கள் நோயாளிகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள், கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு உள்நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒரு நோயாளியிடம் சாப்பிட்டீங்களா என கேட்டார். அவரும் இன்னும் சாப்பாடு வரவில்லை என்றார். காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என கேட்டார். அது எத்தனை மணிக்கு கொடுத்தார்கள் என கேட்டார். அதற்கு அந்த நோயாளி டிபன் 10.30 மணிக்கு கொடுத்தார்கள், இட்லி கொடுத்தார்கள், மதியம் சாப்பாடு லேட்டாவதால் வீட்டிலிருந்து கொண்டு வருகிறார்கள் என்றார்.
உடனே டைம் என்ன ஆச்சு இன்னும் ஏன் சாப்பாடு கொடுக்கவில்லை என கடிந்து கொண்டார். உடனே ஊழியர் ஒருவர் சார் சாப்பாடு ரெடியாகிவிட்டது ,இப்போது கொடுத்துவிடுவோம் என்றார். அதற்கு ககன் தீப் சிங் எங்கே சாப்பாட்டை காட்டுங்கள் என்றார். மேலும் இட்லியை சாப்பிட்டு பார்த்துவிட்டு என்ன இது இட்லி கல்லு மாதிரி இருக்கு என கேட்டார். மேலும் சாம்பாரை கலக்கி பார்த்து ஆய்வு செய்தார். மேலும் பாத்ரூமுக்கு சென்ற அவர் அங்கு கழிப்பறை சுத்தமில்லாததை கண்டு கோபமடைந்தார். இவர் கடிந்து கொண்டதால் அந்த மருத்துவமனையே அலறியது.












Click it and Unblock the Notifications