சசிபெருமாள் மரணத்திற்கு காரணமான மதுக்கடை மூடல்- மதுவிலக்கை அமல்படுத்த மனைவி கோரிக்கை
சேலம்: தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும் என்று சசிபெருமாளின் மனைவி மகிழம் கோரிக்கை விடுத்துள்ளார். சேலத்தை அடுத்த மேட்டுக்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். சசிபெருமாளின் மரணத்திற்குக் காரணமான உண்ணாமலைக்கடை டாஸ்மாக் கடையை மூடியுள்ளது மாவட்ட நிர்வாகம்.
மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் கடை கோயில், பள்ளி இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அதனை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அந்த ஊர் மக்களுடன் கடந்த ஆண்டு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்று செல்போன் டவர் மீது போராட்டம் நடத்திய அவர் மரணமடைந்தார் நாடுமுழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சசிபெருமாள் மறைவையடுத்து அவரது சொந்த ஊரான மேட்டுக்காட்டில் உறவினர்கள் சோகமடைந்துள்ளனர். சசிபெருமாள் உயிரிழப்பில் மர்மம் இருந்தால் உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சசிபெருமாள் உடலை பெற சகோதரர், மகன் உள்ளிட்ட 6 பேர் நாகர்கோவிலுக்கு செல்கின்றனர்.
இதனிடையே சசிபெருமாள் உயிரிழக்க காரணமாக இருந்த உண்ணாமலைகடை டாஸ்மாக் மதுக்கடையை மாவட்ட அதிகாரிகள் மூடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒரு உயிர் பறிபோன பின்னரே அரசு மதுக்கடையை மூட வேண்டுமா என்று உண்ணாமலைக்கடை பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.