பிரதமர் போய் விவசாயிகளை பார்க்க வேண்டுமா.. நிர்வாணப் போராட்டம் பற்றி பாஜக கங்கை அமரன் திமிர் பேச்சு
பிரதமர் மோடி போய் விவசாயிகளை பார்க்க வேண்டுமா என்று அண்மையில் பாஜகவில் சேர்ந்து ‘சீட்’ வாங்கிய பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.
சென்னை: பணக்கார விவசாயிகள் கடனை வாங்கிக் கொண்டு தள்ளுபடி செய்ய கோருவது நியாயமா என்று கங்கை அமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; வறட்சி நிவாரணம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 28 நாட்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கை என்ன என்று கேட்பதற்கு கூட மோடி அரசு தயாராக இல்லை. தொடர்ந்து விவசாயிகள் ஆட்சியாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் மீசை வழித்து, மொட்டை அடி, எலி கறி தின்று, பாம்பு கறி தின்று போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஏமாற்று வேலை
இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி, போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு உள்பட 8 பேரை அழைத்து சென்றுள்ளனர் போலீசார். பொய் சொல்லி அழைத்து சென்று மோடியை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யாமல் விவசாயிகளை போலீசார் ஏமாற்றியுள்ளனர்.

கேவலம்
இதனால், மோடியை பார்க்கச் சென்ற விவசாயிகள் அனைவரும் ஆடைகளைக் கழற்றி நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை அண்மையில் பாஜகவில் சேர்ந்து ஆர்.கே. நகரில் போட்டியிட ‘சீட்' வாங்கிய கங்கை அமரன் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். மேலும் விவசாயிகளைப் போய் பிரதமர் பார்க்க வேண்டுமா என்றும் கேள்வி கேட்டு கேவலப்படுத்தியுள்ளார் கங்கை அமரன்.

அநியாயம்
விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்பது நியாயமா எனச் சிந்திக்க வேண்டும் என்று தெனாவட்டாக பேசியுள்ள கங்கை அமரன், நிர்வாணப் போராட்டம் அவசியமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். திரைப்படத் துறையினரையெல்லாம் சந்திக்கும் பிரதமர் என்று விவசாயிகள் பிரதமரை குற்றம்சாட்டுகிறார்கள், ஒரு நாட்டின் பிரதமர் எல்லோரையும் சந்தித்துவிட முடியுமா என்று கங்கை அமரன் அநியாயமாக பேசியுள்ளார்.

பணக்கார விவசாயிகள்
இதெல்லாவற்றையும் விட கொடுமையாக, 3 ஆயிரம் ஏக்கர் வைத்திருக்கும் பெரிய பெரிய விவசாயிகள் கூட கடன் வாங்கிக் கொண்டு அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டால் என்ன நியாயம்? என்று தன்னை ஒரு பாமர அரசியல்வாதி என்று சொல்லிக் கொண்டே, பாஜக தலைவர் எச். ராஜா விவசாயிகள் மீது அள்ளிக் கொட்டிய நெருப்பின் மிச்சத்தை, கங்கை அமரனும் அள்ளிக் கொட்டினார்.












Click it and Unblock the Notifications