கனமழை காரணமாக மக்கள் நலக்கூட்டணியின் கோவை பொதுக்கூட்டம் டிச. 12-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் பரவலான மழை காரணமாக நவம்பர் 24-ஆம் தேதி கோவையில் நடைபெறவிருந்த மக்கள் நலக்கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டு வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அதன் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,

மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் நவம்பர் 24-ஆம் நாள் கோவையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.சுதாகர் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வதாக இருந்தனர்.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையாலும், அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்காலும் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நலக் கூட்டணியின் தொண்டர்களும் நிவாரணப் பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சில நாட்களுக்கு மழை தொடரலாமென வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, கோவையில் நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 12ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு போதிய நிவாரணங்களை வழங்கவிலலை. வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காததால் தலைநகர் சென்னையில்கூட மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணியின் தொண்டர்கள் இயன்றவரையில் எல்லா உதவிகளையும் செய்யுமாறு வேண்டுகிறோம்.
தமிழக அரசு இனியாவது நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம், என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications