திருச்சி: கல்குவாரியில் கண்டெடுக்கப்பட்ட சிறுமி உடல்… நரபலியா?
திருச்சி: திருச்சி அருகே மாயமான சிறுமியின் உடல் கல்குவாரி குட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி நரபலி கொடுக்கப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவெறும்பூர் அய்யனார் கோவிலைச் சேர்ந்தவர் முனியப்பன் -அமராவதி தம்பதி. கூலித்தொழில் செய்து வரும் இவர்களுக்கு ராகவி (வயது 7) இன்பரசி (வயது 4) என இரண்டு பெண் குழந்தைகள். கடந்த 30 ஆம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த இன்பரசி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.
அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் இன்பரசியை தேடி அலைந்துள்ளனர். ஆனால் இன்பரசி பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திருவெறும்பூர் காவல்நிலையத்தில் முனியப்பன் புகார் கொடுத்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று காலை அய்யனார் கோவில் அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் இன்பரசியின் சடலம் மிதப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இன்பரசி வசித்த அதே பகுதியில் ஒருவர் மாந்திரீகம், குறி சொல்லும் தொழில் செய்து வருகிறார். அந்நபர் குழந்தையை நரபலி கொடுத்திருக்கலாம் என இன்பரசியின் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். எனவே இதுகுறித்து உரிய விசாரணை வேண்டும் என இன்பரசியின் பெற்றோரும் உறவினர்களும், உடலை வைத்துக் கொண்டு திருவெறும்பூர் -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின் சாலைமறியல் கைவிடப்பட்டது. இன்பரசியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாயமான சிறுமி சடலமாக மிதந்தது எப்படி? அவர் நரபலி கொடுக்கப்பட்டது உண்மையா, அல்லது உயிரிழக்க காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.