தனித்து நின்று தைரியமாக வாக்கு கேட்கிறோம்: ஜி.கே.வாசன்
சென்னை: இந்தியாவில் காங்கிரசால் மட்டுமே நிலையான ஆட்சி கொடுக்க முடியும். மத வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசை ஆதரித்து காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஜி.கே.வாசன் கூறியதாவது:
தனித்து நிற்கும் காங்கிரஸ்
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் தனித்தன்மையோடு, தமிழக மக்களுக்கு, இந்திய மக்களுக்கும் காங்கிரஸ் அரசு செய்த பணிகளை எடுத்து சொல்லி தைரியமாக வாக்கு கேட்டு நியாயத்தின் அடிப்படையில் வெற்றிபெறும் நல்ல சூழ்நிலையில் இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
வசந்த காலம்
இதுதான் காங்கிரஸ் பேரியக்கத்தின் வசந்தகாலம் காங்கிரசுக்கு கிடைத்து இருக்கின்ற நல்ல ஆரம்பம். காங்கிரஸ் செல்லும் பாதை வெற்றி பாதை.
காங்கிரஸ் கட்சியின் சாதனைகள்
ஏழை-எளிய மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும், சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றிய அரசு காங்கிரஸ் அரசு.
நில உரிமைச்சட்டம்
உணவு பாதுகாப்பு சட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், இலவச கல்வி திட்டம், லோக்பால் ஊழல் தடுப்பு சட்டம், நில இழப்பீடு சட்டம், மலைவாசிகளுக்கு நில உரிமை சட்டம் என எண்ணற்ற சட்டங்கள் கொண்டு வந்தோம்.
சிறுபான்மையினர் நலன்
உணவுக்கு உத்தரவாத சட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், விவசாய கடன், கல்வி கடன், தலித் மக்கள் மேம்பாடு, சிறுபான்மையினர் நலன் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்லாயிரம் கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதவாதத்திற்கு முற்றுப்புள்ளி
தலித், சிறுபான்மை மக்களுக்கு மத்திய காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டுமே மதவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கட்சி என்பதை இஸ்லாமிய மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நிலையான ஆட்சி
இந்தியாவில் காங்கிரசால் மட்டுமே நிலையான ஆட்சி கொடுக்க முடியும். மத வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் ஜி.கே.வாசன்.