25 தொகுதிகள் எதிர்பார்ப்பு? 8 தரும் அதிமுக: ஜெ - வாசன் சந்திப்பு ரத்தான பின்னணி
சென்னை: அதிமுக - தமாகா கூட்டணியை விரைவில் முடிவுக்கு கொண்டுவர இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 25 சீட் வரை வாசன் எதிர்பார்ப்பதாகவும், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே சீட் தர அதிமுக தரப்பு கூறுவதாலே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 52 நாட்கள் உள்ளன. வேட்பு மனுதாக்கல் ஏப்ரல் 22 தொடங்கி, 29-ந் தேதியுடன் முடிகிறது. நாட்கள் நெருங்குவதால் கூட்டணி அமைப்பதில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. மக்கள் நலக் கூட்டணியும், தேமுதிகவும் இணைந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன.
பாஜக ஜனதா கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் தனித்தனியே போட்டியிடுவதாகவும் அறிவித்து விட்டன. பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது.
இதனை தொடர்ந்து ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, (த.மா.கா.) அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுமா? அல்லது தேமுதிக+ மக்கள் நல கூட்டணியில் இணையப்போகிறதா? என்ற எதிர்பார்ப்பு தற்போது கிளம்பி உள்ளது. ஜி.கே.வாசன் இதுவரை கூட்டணி முடிவை பற்றி அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

அதிமுக கூட்டணியில் வாசன்?
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துவிட்டதால், அதிமுக கூட்டணியில் தமாகா இணையும் என்ற பேச்சும் நிலவுகிறது. அங்கு எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் தேமுதிக+ மக்கள் நலக்கூட்டணி அல்லது தாங்கள் எதிர்பார்த்த தொகுதிகளை தரும் கூட்டணியுடன் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

கேட்பது 25 கொடுப்பது 10
கட்சி தொடங்கியது முதல் அதிமுக அரசு மீதான விமர்சனத்தை தவிர்த்து வரும் தமாகா தலைவர் வாசன், திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் சீட்டை விட ஒரு சீட்டாவது கூடுதலாக தங்களுக்கு தர வேண்டும் என வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தரப்பில் 8 தொகுதிகள் வரை மட்டுமே தர முடியும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இதுவும் வாசனை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெ - வாசன் சந்திப்பு ரத்து
ஜெயலலிதாவும் வாசனும் நேருக்கு நேர் சந்திக்கும் பட்சத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும் என்று தொண்டர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், நேற்று காலை ஜி.கே.வாசன், ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணியை உறுதி செய்வார் என்றும் கூறப்பட்டது. ஆனால்
ஆனால் ஜெயலலிதா தரப்பில் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. இவர்களின் சந்திப்பு ரத்தானதால், தமாகா நிர்வாகிகள் அனைவரும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கினர்.

வாசனை இழுக்க தேமுதிக+மநகூ முயற்சி
அதிருப்தியில் இருக்கும் வாசனை இழுக்க தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி முயற்சித்து வருகிறது. இதற்காக வாசனுடன் விஜயகாந்த் தொடர்ந்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

ரகசிய பேச்சு
இதனால் தமாகாவுக்கு கூடுதலாக சில தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும், இது தொடர்பாக இருதரப்பிலும் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தொகுதிகள் எண்ணிக்கை உறுதியான உடன் ஜெ - வாசன் சந்திப்பு நடைபெறும் என்று தமாகா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாசனுடன் பேசிய வைகோ, திருமா
அதே நேரத்தில் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற வாசன், வைகோ, திருமாளவளனை சந்தித்து பேசியுள்ளார். இதுவும் இப்போது சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கொடுக்கும் சீட்டை பெற்றுக்கொண்டு கூட்டணியில் இணைவாரா? அல்லது தேமுதிக+மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து பஞ்சபாண்டவர் அணி 6 பேர் அணியாகுமா? இன்னும் சில தினங்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications