த.மா.கா. யாருடன் கூட்டணி? அடுத்த வாரம் அறிவிப்பு- ஜி.கே.வாசன்
சென்னை: சட்டசபை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை அடுத்த வாரம் அறிவிப்பதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ம் தேதி வாக்குப்பதிவும், மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறது.
மேலும் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நடைபெற இருக்கின்ற தேர்தல் முறையாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெறுவதற்கான நல்ல சூழலை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
தற்போது மாணவர்களுக்கான தேர்வு காலம் என்பதால் அவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்திட வேண்டும்.அதற்கேற்ப தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் தேதி பெரும்பாலான கட்சிகள் எதிர்பார்த்ததை விட 10 நாட்கள் தள்ளி போயிருக்கிறது.
எனவே கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் தங்களின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தேர்தல் அட்டவணைக்கு ஏற்றவாறு ஓரிரு வாரங்கள் கழித்து அறிவிக்கக்கூடும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் கால அவகாசம் இருப்பதால் அதற்கேற்றவாறு மார்ச் 2-வது வாரம் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.