மாத்தி யோசிங்க.. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள்- ஞானதேசிகன்

கோபிச்செட்டிப்பாளையத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பிறந்த நாள் விழாவில் ஞானதேசிகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லையென்றாலும் தன்னலமற்ற தொண்டர்களை கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலமாகவே உள்ளது.
மனதில் பட்டதை பேசக் கூடிய குணம் இளங்கோவனுக்கும் எனக்கும் இருப்பதால் தான் ஒத்துப் போகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடன் கூட்டு சேரும். கூட்டணி அமைக்கும் என பலர் கேட்கிறார்கள். தேர்தலின் போது யாருடன் கூட்டணி? என்பது பற்றி வியூகம் அமைக்கப்படும். அப்போது தான் எந்த கட்சி எங்களுடன் கூட்டணி என்பது தெரியும்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் இளம் தலைவர் ராகுல்காந்தி மிகப்பெரிய சக்தியாக உருவாகி வருகிறார்.
இந்தியா முழுவதும் மக்களுக்கு ராகுல் காந்தி பற்றி நன்கு தெரியும். ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விருப்பம்.
அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே பிரதமரை தேர்ந்தெடுக்கும் முறை உள்ளது. அந்த நடைமுறையை மாற்றி தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்க வேண்டும். இதை நாங்கள் கட்சி மேலிடத்தில் வலியுறுத்துவோம்.
அதேசமயம் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியை யாருக்கு தெரியும். அவரது மாநிலமான அவர் ஆட்சி நடத்துகிற குஜராத் மாநிலத்தில் மட்டும்தான் மோடியை தெரியும்.
இந்தியா முழுவதும் அவர் சென்று வருவதால் பிரதமர் ஆகிவிடலாம் என நினைக்கிறார். இது மோடியின் பகல் கனவாகத் தான் இருக்கும். அவர் பிரதமர் ஆக முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications