சோனியா காந்தியின் மனதை மாற்றிய திமுக சக்திகள்... ஞானதேசிகன் பகிரங்க தாக்கு
சென்னை: திமுகவிடம் எப்பவுமே பெரியண்ணன் தனம் உண்டு. அப்படித்தான் அது நடந்து கொள்ளும். மாநிலங்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தேமுதிக வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்திருந்தபோது அதை தனது ஆதரவு சக்திகள் மூலம் திசை திருப்பியது திமுக என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கூறியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நேற்று இரவு நெறியாளர் மு.குணசேகரன் நடத்தும் காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஞானதேசிகன் பேசியபோது இதுகுறித்த கருத்தை பகிர்ந்து கொண்டார்.

ஞானதேசிகன் கூறுகையில், திமுகவிடம் பிக் பிரதர் என்ற பெரியண்ணன் தனம் உண்டு. எப்புமே அப்படித்தான் நடந்து கொள்ளும். இதைச் சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். மாநிலங்களவைத் தேர்தலின்போது தேமுதிக சார்பில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டார். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தங்களது வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு எங்களிடம் அவர்கள் கேட்டிருந்தனர்.
திமுக சார்பில் கனிமொழி நிறுத்தப்பட்டிருந்தார். அவருக்கு ஆதரவு அளிக்குமாறு பலரிடமும் திமுக ஆதரவு கேட்டது. எங்களிடம் கேட்கவில்லை. இதையடுத்து நமது ஆதரவை தேமுதிக மட்டுமே கேட்டிருந்ததால் அதை ஆதரிக்குமாறு சோனியா காந்தி அவர்கள் கூறி விட்டார். அப்போது நான் டெல்லியில் இருந்தேன். இந்த நிலையில் சென்னையிலிருந்து சில திமுக ஆதரவு சக்திகள் (காங்கிரஸ் கட்சியினர்) டெல்லிக்கு வந்து உட்கார்ந்து, அதற்கான வேலைகளைச் செய்து கடைசி நேரத்தில் அது மாற்றப்பட்டது என்றார் ஞானதேசிகன்.












Click it and Unblock the Notifications