புதையல், ஓ பக்கங்கள், தீம்தரிகட, பரீக்ஷா... பன்முகத் தன்மை கொண்ட ஞாநி
சென்னை: மறைந்த மூத்த பத்திரிகையாளர் ஞாநி தமது இறுதி மூச்சு உள்ளவரை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தவர். வார இதழ்களில் ஞாநி எழுதிய ஓ பக்கங்கள் அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தின.
தந்தையைப் போல பத்திரிகை துறையில் இணைந்தவர் ஞாநி. இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளேடுகளில் பணியாற்றினார். திமுகவின் முரசொலி நாளேட்டின் வார இணைப்பான புதையலின் பொறுப்பாசிரியராக பணிபுரிந்தார்.
அப்போது நாட்டை உலுக்கிய போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்த விரிவான தகவல்களை ஞாநி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பரீக்ஷா என்ற அமைப்பின் மூலம் நாடகங்களை அரங்கேற்றினார்.
வார இதழில் ஞாநி எழுதிய தவிப்பு என்ற தொடர் மிகப் பெரும் பரபரப்பை கிளப்பியது. அதேபோல் ஓ பக்கங்கள் என்ற தலைப்பில் அவர் எழுதிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தீம்தரிகட என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். டிவி விவாதங்களில் மதச்சார்பின்மையை வலியுறுத்தி தொடர்ந்து பேசி வந்தவர் ஞாநி.
கடந்த சில நாட்களாக புத்தக கண்காட்சியில் பங்கேற்றும் வந்தார் ஞாநி. கடைசி மூச்சுவரை தொடர்ந்து இயங்கிய ஞாநியின் மறைவுக்கு மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஞாநியின் கடைசி முகநூல் பதிவு:
துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்.
இவ்வாறு ஞாநி பதிவிட்டிருந்தார்.