கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக தள்ளுபடி
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜ் ஜாமீன் மனுவை மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி பள்ளி பாளையம் அடுத்த கிழக்கு தொட்டி பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

ரயில் விபத்தில் கோகுல்ராஜ் இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் பள்ளிபாளையம் காவல் துறையினர் விசாரணையை துவக்கினர். எனினும், கோகுல்ராஜ் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என, அவரது பெற்றோர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு எழுப்பி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோகுல்ராஜ் சடலம் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து கோகுல்ராஜ் சம்மந்தப்பட்ட வழக்கு திருச்செங்கோடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தவிர, அந்த வழக்கு கொலை வழக்காகவும் மாற்றப்பட்டது. அதன் விசாரணை அதிகாரியாக திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுப்பிரியா நியமனம் செய்யப்பட்டார்.
அதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யுவராஜ் தலைமறைவானர். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.
சிபிசிஐடி விசாரணை
விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை விறுவிறுப்படைந்தது. போலீசாரால் தேடப்பட்ட யுவராஜ், வாட்ஸ்அப், டிவி பேட்டி என போலீசாருக்கு சவால் விட்டு வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார்.
குண்டர் சட்டம்
யுவராஜ் தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யுவராஜ் தனக்கு ஜாமீன் வழங்ககோரி ஜனவரி மாதம் நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்
ஜனவரி 7 ஆம் தேதி 700 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் யுவராஜ் உள்பட 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை நகல் யுவராஜ் உள்ளிட்ட 17 பேருக்கும் கடந்த 3-ஆம் தேதி வழங்கப்பட்டது.
மூன்றாவது முறையாக ஜாமீன் மனு:
இந்த நிலையில் யுவராஜ் சார்பில் 3-வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீது நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை நடைபெற்றது. இதன்படி, வேலூர் சிறையில் உள்ள யுவராஜிடம் காணொலிக் காட்சி முறையில் நீதிபதி விசாரணை நடத்தினார்.
அரசு தரப்பில் யுவராஜை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக யுவராஜ் இருப்பதால் அவருக்கு ஜாமின் வழங்கமுடியாது என கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கில் யுவராஜின் ஜாமின் மனு இதுவரை 3 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சிறையில் 7 பேர்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தோழி சுவாதி மற்றும் கோகுல்ராஜின் பெற்றோர்கள், யுவராஜ் தலைமறைவாக இருக்கும் போது அவரை பேட்டி எடுத்த தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் என பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். குற்றப்பத்திரிக்கையில் 112 பேர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளனர். யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் யுவராஜ் உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். குண்டர் சட்டம் பாய்ந்த யுவராஜ் மட்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற 6 பேர் சேலம் சிறையில் உள்ளனர். மற்ற அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications