சென்னை ஏர்போர்ட்டில் மீண்டும் தங்கம் பறிமுதல் - மதிப்பு 43 லட்சம் ரூபாய்!
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூபாய் 43 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று நேற்று இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பெரம்பூர் ஜானகிராமன் தெருவை சேர்ந்த அக்பர் என்பவரும் அதே விமானத்தில் வந்தார். அவரது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் கைப்பையில் மறைத்து வைத்து 800 கிராம் தங்க கட்டிகளை கருப்பு பெயிண்ட் அடித்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 24 லட்சம் ஆகும். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடந்த சோதனையின் போது ராஜசேகர் என்பவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 550 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 19 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications