நினைவிடமாக்கும் பூர்வாங்கப் பணிகள் தொடக்கம்.. ஜெ. பங்களாவில் வருவாய் அதிகாரிகள் ஆய்வு
ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட வீட்டினை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலைய வீட்டில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வீடு வேதா நிலையம். 1967 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அம்மாவால் 1.32 லட்சத்திற்கு வாங்கப்பட்ட வீடு இது. போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் 24,000 சதுர அடி பரப்பு உள்ளது. இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 120 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
வேதா நிலையத்திற்குள் மகாராணியைப் போல வலம் வந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்த வீட்டில் ஜெயலலிதாவிற்கு உதவியாக சசிகலாவும், இளவரசியும், அவரது வாரிசுகளும் இருந்தனர். வெளியாட்கள் யாரும் அத்தனை எளிதில் வேதா நிலையத்திற்குள் நுழைந்து விட முடியாது.

வேதா நிலையம்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலாவின் முழு கட்டுப்பாட்டிற்குள் வேதா நிலையம் வந்தது. சில மாதங்களில் அவரும் சிறைக்கு போகவே, சசிகலா குடும்ப உறவுகளே வேதா நிலையத்திற்குள் ஆதிக்கம் செலுத்தினர். அதுவும் சில மாதங்கள்தான்.

பொதுமக்கள் கோரிக்கை
சசிகலா சிறைக்கு சென்றதை அடுத்து அந்த வீட்டை ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் பராமரித்து வந்தார். ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா நிலையம்' , இல்லத்தை நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அரசு நினைவு இல்லம்
ஜெயலலிதா அவர்களின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும், பொதுமக்கள் அறையும் வண்ணம், அம்மா அவர்கள் சிறப்பாக வாழ்ந்த, சென்னை போயஸ் தோட்டத்தில், அமைந்துள்ள 'வேதா நிலையம்' அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
முதல்வரின் அறிவிப்பையடுத்து போயஸ் கார்டன் மீண்டும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பெண் போலீசார்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா இல்லத்துக்கு உரிமை கொண்டாடி வேறு யாராவது வந்துவிடுவார்களோ என்ற அடிப்படையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு
வேதா நிலையத்தில் தங்கியிருந்த சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். வேதா நிலையம் முழுவதையும் போலீஸ் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. போயஸ்கார்டன் பகுதியில் வசிக்கும் மக்களை தவிர வெளி நபர்கள் அந்த சாலை வழியாக செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர். போயஸ்கார்டன் பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு
வேதா நிலையத்தினை நினைவு இல்லம் ஆக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையை அரசு தொடங்கிவிட்டது. இன்று வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு போயஸ்கார்டன் பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications