செங்கம் விபத்து.. அரசு பேருந்தும் காய்கறி ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 பேர் பலி
செங்கம்: செங்கம் அருகே அரசு பேருந்தும் காய்கறி ஏற்றி வந்த லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் மூவர் பலியாகினர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த காந்திநகர் பகுதியில் சிதம்பரத்திலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அது போல் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு காய்கறி ஏற்றி வந்த லாரியும் எதிரே வந்து கொண்டிருந்தது.

அப்போது இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பஸ் ஓட்டுநர் மற்றும் லாரியில் இருந்த லோடுமேன் இருவர் பலியானார். அரசு பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அரசு பேருந்தை பின் தொடர்ந்த மற்றொரு காரும் விபத்துக்குள்ளானது. இது குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். அது போல் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களையும் பேருந்தில் பயணித்தவர்களையும் விசாரித்து வருகிறார்கள்.

இந்த விபத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல் செங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications