சென்னையில் திடீர் சாலை மறியலில் குதித்த அரசு ஊழியர்கள்... 1000 பேர் கைது
சென்னை: புதிய பென்சன் திட்டம் ரத்து உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள் இன்று சென்னையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 1000 ஊழியர்களைப் போலீசார் கைது செய்தனர்.
புதிய பென்ஷன் திட்டம் ரத்து, 10 சதவீத இடைக்கால நிவாரணம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.

3-வது நாளாக தொடரும் இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக அரசு ஊழியர்கள் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில், இன்று காலை 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் கிரீஸ் சாலை சந்திப்பில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் திடீரென சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசுக்கு எதிராகவும் கோஷமிட்ட ஊழியர்கள் சிலர் சாலையின் குறுக்கே படுத்துக் கொண்டனர்.

இதனால், அந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல இயலாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் சாலையில் காத்து நின்றன. இந்தப் போக்குவரத்து நெரிசல் சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டவில்லை.
இதனால் மறியலில் ஈடுபட்ட மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி, துணை தலைவர்கள் அப்பர், தியாகராஜன், அன்பரசு, மாவட்ட தலைவர்கள் ராமசாமி, நரசிம்மன் மற்றும் நிர்வாகிகள் உள்பட 1000 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். அதனைத் தொடர்ந்து அந்தச் சாலையில் போக்குவரத்து சீரானது.

கைதான அரசு ஊழியர்கள் அனைவரும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு ஊழியர்கள் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி கூறுகையில், "அரசு ஊழியர்களாகிய நாங்கள் கடந்த 3 நாட்களாக எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை. நிறைவேற்றவும் முன் வரவில்லை. எனவே இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதனால் அரசு பணிகள் அனைத்தும் முடங்கும். எனவே அரசு உடனே எங்களை அழைத்து பேச வேண்டும். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications