எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்ற ஸ்டாலின் சொல்லும் எம்எல்ஏக்கள் கணக்கு
தமிழகத்தைக் காப்பாற்ற, தமிழகம் டெல்லியில் மண்டியிடுவதைத் தவிர்க்க எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு முடிவுகட்ட அப்புறப்படுத்த ஒன்று கூடுவோம் எத்தகைய தியாகத்தையும் செய்ய சபதம் ஏற்போம் என்று கூறியுள்ளார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். இதற்காக புதிதாக கூட்டல் கழித்தல் கணக்கு கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பெரியார் சிலை அருகே திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா, சட்டமன்ற பணியில் வைரவிழா, முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விழாவில் பேசிய ஸ்டாலின், இந்தியாவில் சமூக நீதிக்குப் பெரிய ஆபத்து வந்துவிட்டது. மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது.
இதற்கு முக்கியக்காரணம் திமுகதான். இப்பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்று அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் கருணாநிதி தெரிவித்தார். கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. சமூகநீதிக்கு உலைவைக்கும் வகையில் திட்டமிட்டு பாஜக செயல்படுகிறது. அதன் முதல்கட்ட நடவடிக்கைதான் நீட் தேர்வு. நீட் கட்டாயம் என்பதை கண்டித்து அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர்.
மருத்துவப்படிப்புக்கு நீட் வந்தால் அடுத்து பொறியியல், நீதிபதிகள் தேர்வு என அனைத்துக்கும் அகில இந்திய அளவிலான தேர்வு வைப்பார்கள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உயர்பதவிகளுக்கு வரக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக வேலைபார்க்கிறது. அதை அதிமுக வேடிக்கைபார்க்கிறது.

நீட் தேர்வு பிரச்சினை
கடந்த தேர்தலில் திமுகவை விட அதிமுக 1.1 % அதிக வாக்குகள்தான் பெற்றது. ஆனால் அவர்கள் ஆளுங்கட்சியாகவும், நாம் பிரதான எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தோம். ஜெயலலிதா ஊழல் சர்வாதிகார ஆட்சி நடத்தினாலும், நீட்டுக்கு தடை இருந்தது. திமுக ஆட்சியிலேயே நீட் பிரச்னை வந்தது.

குதிரை பேர ஆட்சி
நாட்டிலேயே முதல்முதலாக திமுக தலைவர் அப்போதைய முதல்வர் கருணாநிதிதான் எதிர்த்தார். திமுக நீதிமன்றம் சென்று தடை பெற்றது. திமுக இருந்தவரை தமிழகத்தில் நீட் தலைகாட்ட முடியவில்லை. ஆனால் இப்போது குதிரைபேர அதிமுக ஆட்சியில் வந்துவிட்டது.

மைனாரிட்டி ஆட்சி
இது மைனாரிட்டி ஆட்சி. அதிமுகவின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள், இப்போது நடைபெறும் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கூறுகின்றனர். திமுக தரப்பில் எதிர்க்கட்சி தலைவரான நான், சட்டமன்றத்தை கூட்ட வேண்டுமென்று கடிதம் அனுப்பினேன். தற்போது, 21 பேர் எடப்பாடி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

ஸ்டாலின் சொல்லும் கணக்கு
சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்கள். ஜெயலலிதா இறந்ததால் 233 உறுப்பினர்கள் உள்ளனர். மெஜாரிட்டி தேவையென்றால், 116 உறுப்பினர் ஆதரவு வேண்டும். இதில் 21 பேர் ஆதரவை விலக்கியுள்ளனர். திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, அதிமுக உறுப்பினர்கள் 21 பேர் சேர்த்தால் 119 வருகிறது. இந்தக் கணக்கு கவர்னருக்குத் தெரியாதா? கவர்னர் கணக்கில் அந்த அளவுக்கு வீக்கா? அவருக்குத் தெரியும்.

ஆளுநரிடம் கணக்கு
தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. நாளை(இன்று) மாலை 5 மணிக்கு எனது தலைமையில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களுடன் 10 பேர், கவர்னரை சந்திக்கிறோம். அப்போது இந்தக்கணக்கை எடுத்துக்கூறுவோம். இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுப்போம்.

சபதம் ஏற்போம்
கோரிக்கையைக் ஆளுநர் ஏற்காவிட்டால் மக்களைத் திரட்டி ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம். ஆட்சியை அப்புறப்படுத்துவோம். இந்தச் செயல் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்காகவோ, பதவிக்கு வருவதற்காகவோ அல்ல. தமிழகத்தைக் காப்பாற்ற, தமிழகம் டெல்லியில் மண்டியிடுவதைத் தவிர்க்க, சமூகநீதியை பாதுகாக்க இதைச் செய்கிறோம். இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட அப்புறப்படுத்த ஒன்று கூடுவோம் எத்தகைய தியாகத்தையும் செய்ய சபதம் ஏற்போம் என்றார்.












Click it and Unblock the Notifications