அறிவியல் கண்காட்சி போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவி
மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவி நித்திய கல்யாணி வெற்றி பெற்றுள்ளார்.
தேவக்கோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார் நித்திய கல்யாணி. இவர் சென்னை அக்னி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஜுனியர் பிரிவில் பங்கு பெற்றார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற நித்திய கல்யாணி, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நித்திய கல்யாணிக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது அவருக்கு மெடல், விருது வழங்கப்பட்டது.
இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்களான கார்த்திகேயன், ராஜேஷ், நந்தகுமார், ஜெனிபர், உமா மகேஸ்வரி ஆகியோருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியர் முத்து மீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.
15 பள்ளிகளில் இருந்து சுமார் 172 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் கலந்து கொண்ட ஒரே பள்ளி இப்பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.