10ம் வகுப்பில் முத்திரை பதித்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 19 பேர் மாநில அளவில் முக்கிய இடங்களைப் பெற்று பெரும் சாதனை படைத்துள்ளனர்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஆண்டு 10,60,866 பேர் எழுதினர். அவர்களில் மாணவர்கள் 5,33,043 பேரும், மாணவிகள் 5,27,823 பேரும் தேர்வு எழுதினர்.
அவர்களில் 9,85,940 பேர் (92.9சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக, 7,96,466 பேர் 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மாநில அளவில் முதலிடம்:
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் முதலிடங்களை பெற்று சாதனை படைத்துள்ளன. வாழப்பாடி அரசு பள்ளியைச் சேர்ந்த ஜெயவந்தனா, பெரம்பலூர், காரணை, அரசு பள்ளியைச் சேர்ந்த பாரதிராஜா, பட்டுக்கோட்டை அரசு பள்ளியைச் சேர்ந்த வைஷ்ணவி ஆகியோர் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
வாழப்பாடி மாணவிகள்:
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அரசு பள்ளி மாணவி ஜெயநந்தனா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த ஹேமப்பிரியா என்ற மாணவி 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்துள்ளார்.
கிராம மக்கள் மகிழ்ச்சி:
அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பதற்கு கிராம மக்கள் பள்ளி தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் தேர்ச்சி:
சென்னை மாநகராட்சி பள்ளிகள் கடந்த ஆண்டை விட 1.5 சதவீதம் அதிக தேர்ச்சி ( 92.15 ) காட்டியுள்ளன. 22 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி காட்டியுள்ளன.
தமிழில் படித்து சாதனை:
அரசு பள்ளிகளில் தமிழை முதல்பாடமாக எடுத்து 6 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளனர். மேலூர் அரசு பள்ளியைச் சேர்ந்த மானஷா, திருப்பூர், பிச்சம்பாளையம்புதூர் அரசு பள்ளியைச் சேர்ந்த ஸ்வாதி ஆகியோர் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.
மாநிலத்தில் இரண்டாமிடம்:
கோவை, செரிபாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த அஸ்விதா காமாட்சி, சேலம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த நறுமுகை, சேலம், வாழப்பாடி அரசு பள்ளியைச் சேர்ந்த ஹேமப்பிரியா, தஞ்சாவூர், மதுக்கூர் அரசு பள்ளியைச் சேர்ந்த ஷபா ஆகியோர் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.