சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை செல்வது உறுதி: கோவையில் சு.சுவாமி பேட்டி
கோவை: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறை செல்வது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோவையில் இன்று அளித்த பேட்டியொன்றில் தெரிவித்தார்.
கோவையில் இன்று சமஸ்கிருத மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை துவக்கி வைக்க, கோவைக்கு, விமானம் மூலம் வந்தார் முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க நிர்வாகியுமான சுப்ரமணியன் சுவாமி.

அப்போது நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே மிக மோசமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை கிடையாது. தமிழகத்தில், ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டுவர வேண்டும்.
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரும். ஜெயலலிதா, சிறைக்கு செல்வது உறுதி.
பிரதமர் மோடி வெளிநாடு செல்வது குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது. வெளிநாடு செல்வது பிரதமரின் பணி. அதேநேரம், கறுப்பு பண மீட்பு விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் சரிவர செயல்படவில்லை.
எனவே, கருப்பு பணத்தை மீட்பது குறித்து பிரதமருக்கு 6 வழிமுறைகள் அடங்கிய கடிதம் அனுப்பியுள்ளேன்.

பீகாரில் தேர்தல் முடிந்த பிறகே, பாஜக செயற்குழு கூடி, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும். பருப்பு விலை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது உண்மையிலேயே ஆச்சரியம் தருகிறது. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications