ஆளுநர் உரையில் உப்புச் சப்பே இல்லை... ஈவிகேஎஸ், விஜயகாந்த் கருத்து
சென்னை: தமிழக ஆளுநரின் உரை உப்புச் சப்பில்லாததாக இருந்ததாகவும், கானல் நீர் போன்றது எனவும் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஆளுநர் ரோசைய்யா உரை ஆற்றினார்.
ஆளுநரின் உரை தொடர்பாக கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
உப்புச் சப்பில்லை:
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழக ஆளுநர் உரை என்பது சம்பிரதாய சடங்காகவே நடைபெற்று வருகிறது. கச்சத்தீவில் மீன்பிடி உரிமையை நிலைநிறுத்துவதன் மூலமே தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று ஆளுநர் உரையில் கூறியிருப்பது பிரச்சினையின் தன்மையை திசை திருப்புவதாகும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்பது இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை மூலமாகத் தான் காண முடியும் என்கிற அடிப்படையில்தான் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஆளுநர் உரை என்பது உப்பு சப்பு இல்லாத, வளர்ச்சியை நோக்கமாக கொள்ளாமல் இருக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கானல் நீர்:
ஆளுநரின் உரை தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுகையில், 'வளர்ச்சிக்கான புதிய திட்டங்களோ, மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்கான தீர்வே கவர்னர் உரையில் இல்லை. கவர்னர் உரை கானல்நீர் போன்றது,' என்றார்.