முதலில் அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்துங்க... ஆளுநருக்கே அறிவுரை சொல்லும் ஜெயானந்த்
அரசு அலுவலக வளாகங்களில் ஊழல் இல்லாமல் இருக்கின்றனவா என்பதை ஆளுநர் முதலில் உறுதி செய்ய வேண்டும் என்று ஜெயானந்த் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆளுநர் முதலில் அரசு அலுவலகங்கள் சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து விட்டு பின்னர் வீடுகளும் கழிவறைகளும் சுத்தமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யலாம் என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
கடலூரில் வண்டிப்பாளையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு செய்ய சென்றார். இந்நிலையில் அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்தபோது அங்கிருந்த கீற்று மறைப்பை திறந்த பார்த்தார்.

அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பார்த்ததும் அலறினார். இதையடுத்து அவரை ஊர்மக்கள் சுற்றி வளைத்தனர்.
இதுகுறித்து பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சசிகலாவின் தம்பி மகன் ஜெயானந்த் திவாகரன் பேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பெண் குளித்துக் கொண்டிருந்த கீற்று மறைப்பை பார்வையிட்ட போது ஆளுநருடன் 18 ஆண்கள் இருந்தனர்.
என்னை பொருத்தவரை முதலில் அரசு அலுவலகங்களில் தூய்மை இருக்கிறதா என்பதை ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு வீடுவீடாக செல்வதும், கழிவறைகளை ஆய்வு செய்வதையும் வைத்துக் கொள்ளலாம் என்று பதிவு செய்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை முதலில் கட்டுப்படுத்திவிட்டு பிறகு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுங்கள் என்ற அர்த்தத்தில் ஜெயானந்த் பதிவிட்டுள்ளார். அவர் அறிவுரை சொல்லும் அளவுக்கு ஆளுநரின் நிலை உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications