ஆளுநர் வருகையால் அவதி... 7 கி.மீ. நடந்தே சென்ற உதகை சுற்றுலா பயணிகள்!
ஆளுநரின் வருகை காரணமாக உதகையில் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை: ஆளுநரின் வருகையினால் நீலகிரி மக்களின் கடும் அவதிக்குள்ளானதையடுத்து, இன்று அவர் சென்னை திரும்பினார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21ம் தேதி அவர் குடும்பத்தினருடன் சென்றார். அடுத்த மாதம் 2ம் தேதி வரை உதகையில் தங்கியிருந்து பல்வேறு விழாக்களில் பங்கேற்கவும் அவர் திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் துயர சம்பவம் நேற்று நடைபெற்றது. அப்போது, ஆளுநர் தனது குடும்பத்தினருடன், ரோஜா பூங்கா, படகு இல்லம் சுற்றி பார்த்து கொண்டிருந்தார். தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் ஆளுநரின் இந்த செயல் நீலகிரி மக்களை கடும் அதிருப்திக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.
இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலை நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, ஆளுநர் தூத்துக்குடி சம்பவம் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பின்னர், கோத்தகிரி வழியாக கார் மூலம் இன்று பிற்பகல் ஆளுநர் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை திரும்பினார்.
முன்னதாக, ஆளுநர் வருகையையொட்டி போக்குவரத்துகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தன. இதனால் கோடையை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. குறிப்பாக, தொட்டபெட்டா சதுக்கத்தில் இருந்து தொட்டபெட்டா வரை சுற்றுலா பயணிகள் உட்பட எந்தவித வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும், தொட்டாபெட்டாவிலிருந்து 7 கி.மீ. தொலைவிற்கு நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டது. இது அம்மாவட்ட மக்களையும் சுற்றுலா பயணிகளையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.












Click it and Unblock the Notifications