புதுக்கோட்டை அருகே விபத்து.. தப்பியது தமிழக ஆளுநரின் கார்!
புதுக்கோட்டை அருகே ஆளுநரின் வாகனம் மீது அரசுப் பேருந்து உரசியது. அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து கார் தப்பியது.
புதுக்கோட்டை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா திட்டம் பற்றி ஆய்வு செய்ய இன்று புதுக்கோட்டை சென்றார். நிகழ்ச்சி முடிந்து புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு செல்லும்போது ஆளுநர் வாகனத்தின் மீது எதிரே வந்த அரசுப் பேருந்து லேசாக உரசியதால் பாதுகாப்புக்கு சென்ற போலீஸார் அச்சமடைந்தனர். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நேரவிருந்த விபத்திலிருந்து ஆளுநரின் வாகனம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூய்மை இந்தியா திட்டம் பற்றி ஆய்வு நடத்த புதுக்கோட்டை மாவட்டத்துக்குச் சென்றார். ஆளுநர் ஆய்வு செய்ய புதுக்கோட்டை வருவதற்கு திமுகவினர் ஆயிரம் பேருக்கும் மேல் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டினர். அதனால், புதுக்கோட்டை பரபரப்பாக காணப்பட்டது.
தமிழக ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டைக்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுக்கோட்டையில் தூய்மை இந்தியா திட்டம் பற்றி பேசினார். மக்கள் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். ஆளுநர் நிகழ்ச்சி முடிந்த பின்னர், புதுக்கொட்டையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்டார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் போலீஸாரின் பாதுகாப்புடன் புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரின் வாகனம் புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, தேவகோட்டையிலிருந்து புதுக்கோட்டைக்கு சேன்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்திசையில் வந்தது. எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து ஆளுநர் வாகனத்தின் மீது லேசாக உரசியது. இதைப் பார்த்த ஆளுநருக்கு பாதுகாப்புக்கு சென்ற போலீஸார் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஆளுநர் வாகனத்தின் ஓட்டுநர் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக ஆளுநர் வாகன் நேரவிருந்த விபத்திலிருந்து தப்பியது. இதில் ஆளுநருக்கோ அவருடைய வாகனத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை.
இதையடுத்து, அந்த அரசுப் பேருந்து புறப்பட்டு சென்றது. ஆளுநர் வாகனமும் திருச்சி புறப்பட்டு சென்றது.