அட, கடைசியில் கவர்ன்மென்ட் பஸ்ஸிலும் கரண்ட் போச்சே... !
புதுக்கோட்டை: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மின் வெட்டுப் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் அரசுப் பேருந்திலும் மின்சாரம் இல்லாமல் ஹெட்லைட் எரியாமல் போனதால் பஸ்ஸை ஓட்ட முடியாமல் நிறுத்தி விட்டனர்.
இதனால் பயணிகள் நடந்து போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் அரசுப் பேருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு முகப்பு விளக்குகள் மற்றும் உள்விளக்குகள் எரியாமல் கீரமங்கலம் பேருந்து நிலையம் வந்தது.
என்னடா இது இருட்டில் ஒரு பஸ் ஆடி அசைந்து வருகிறது என்று பஸ் நிலையத்தில் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்தப் பேருந்து அதற்கு மேல் போகவில்லை. நிறுத்தப்பட்டு வி்ட்டது.
இதனால் மேற்பனைக்காடு வரை செல்ல வேண்டிய பயணிகள் கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். அதன் பிறகு மேற்பனைக்காடு பகுதிக்கு வேறு பஸ் வசதியும் இல்லை. அதனால் பலர் நடந்து சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில்,த புதுக்கோட்டையில் இருந்து வரும் போது டைனமோ வேலை செய்யாமல் நடுவழியில் முகப்பு விளக்குகள் மற்றும் உள் விளக்குகள் நின்றுவிட்டது. அதனால் மேற்பனைக்காடு வரை செல்ல வேண்டிய பயணிகள் செல்ல முடியவில்லை என்றனர்.
வீடுகள் தோறும், தொழிற்சாலைகள் தோறும் அலங்கரித்து வரும் மின்வெட்டு அரசுப் பஸ்ஸுக்குள்ளும் புகுந்து விட்டதோ என்று மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications