டெண்டர் எடுப்பதில் தகராறு- கவுன்சிலர், அரசு கான்ட்ராக்டர் மோதல்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் டெண்டர் எடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் கவுன்சிலர் கன்னத்தில் பளார் விட்டார் அரசு காண்டராக்டர். அவரும் திருப்பி தாக்கியதால் டெண்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் பஞ்சாயத்து பகுதியில் வளர்ச்சி பணிகளான தார்சாலை, சிமிண்ட் சாலை, கழிவுநீர் வடிகால் வசதி, சாலை சீரமைப்பு, குடிநீர் குழாய்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது.
கோவில்பட்டி அருகே இளம்புவனத்தை சேர்ந்த மந்திரம் மகன் பேச்சியப்பன் என்பவர் ரூ.6 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கு சங்கரன்கோவிலை சேர்ந்த அரசு ஓப்பந்தக்காரர் நிஷார் மூலம் டெண்டர் கோரினார்.
பேச்சியப்பன் ஓன்றிய கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அங்கிருந்த கோவில்பட்டியை சேர்ந்த அரசு ஓப்பந்தக்காரர் அமிர்தராஜ் இந்த பணிக்குரிய டெண்டரை தான் எடுக்கப்போவதாக பேச்சியப்பனிடம் தெரிவித்தார்.
இதற்கு பேச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அமீர்தராஜ், பேச்சியப்பன் கன்னத்தில் அறைந்தார். இதனால் வெகுண்ட பேச்சியப்பன் திரும்பி அவரது கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவத்தால் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.
இதுகுறிதது கோவில்பட்டி கிழக்கு பகுதி காவல் நிலையத்தில் பேச்சியப்பன் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன், அமிர்தராஜ் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். டெண்டர் அலுவலகத்தில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அடித்து கொண்ட சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.












Click it and Unblock the Notifications