வட கிழக்குப் பருவ மழையில் விட்டதை தென் மேற்குப் பருவ மழையில் பிடிக்க முயலும் ஜெயலலிதா
சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் வட கிழக்குப் பருவ மழை சமயத்தில் அலட்சியமாக இருந்து கெட்ட பெயரை வாங்கிய அனுபவத்தை வைத்து தற்போது தென் மேற்குப் பருவ மழைக்காலத்தில் அதிமுக அரசு சுதாரித்து எழுந்துள்ளது. முன்கூட்டியே பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து அடடா என்று பெயர் வாங்க ஆரம்பித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழையை யாரால் மறக்க முடியும்?. எத்தனை வேதனைகள், எத்தனை சோதனைகள்.. என்னென்ன துயரங்கள். இந்த மழைக்காலத்தை மறக்க முடியாத அளவுக்கு வருண பகவான் செய்து விட்டார் என்பது ஒரு பக்கம் என்றால், அதிமுக அரசின் அப்போதைய அமைச்ர்கள் காட்டிய அலட்சியத்தையம் மக்களால் மறக்க முடியாது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வெள்ளம்...
சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் உறைவிடங்களை இழந்து பல இன்னல்களைச் சந்தித்தனர். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இந்த சேதத்திற்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

அரசின் அலட்சியம்...
அமைச்சர்கள் சரிவர வேலை செய்யவில்லை. அதிகாரிகள் எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்று சரமாரியாக புகார்கள் குவிந்தன. இந்த நிலையில் தற்போது தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த முறை ஏற்பட்ட கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா சுதாரிப்பாக பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

கூடுதல் மழைக்கு வாய்ப்பு...
தற்போது, ஆங்காங்கே பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் சேதம் ஏற்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலும், கேரளாவிலும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. சென்னை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை 4 முதல் 6 சதவீதம் கூடுதலாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறி இருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை...
கடந்த ஆண்டை போல் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் பாதிப்பு ஏற்படும் முன் மழையால் சேதம் ஏற்படுவதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து, மழையினால் சேதம் ஏற்படுவதைத் தடுக்க அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

கடல் அரிப்பு...
சென்னையில் பல்வேறு அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களும் உஷாராக உள்ளனராம். பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் அரிப்பு பிரச்சினை வந்த பகுதிக்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனடியாக சென்று பார்த்து ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தூண்டில் வளைவு அமைப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறதாம்.

கனமழை...
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கன மழை பெய்து வருகிறது. அங்கும் தேவையான நடவடிக்கைளை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்ப்பட்டுள்ளதாம். மொத்தத்தில் வட கிழக்குப் பருவ மழையில் தவற விட்ட நல்ல பெயரை தென் மேற்குப் பருவ மழையில் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்வர் ஜெயலலிதா செயல்படுவது தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications