2 லட்சம் பேர் எழுதும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு.. நாளை!
சென்னை: தமிழகத்தில் 2 லட்சம் பேர் எழுதும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை நடக்கிறது 1,807 முதுகலைபட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்து எடுப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்துகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சமர்ப்பிக்க கடந்த நவம்பர் 26 ஆம் தேதி கடைசி நாள்.
2 லட்சத்து 2 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். தேர்வு 499 மையங்களில் நடக்கிறது. சென்னையில் மட்டும் 34 மையங்களில் 15 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். தேர்வு எழுதுவோர் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த தேர்வை செம்மையாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தேர்வு நடக்கும்போது தேர்வு அறைகள் சுகாதாரமாக இருக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுநய்யர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தேர்வு மையங்களை தேர்ந்து எடுத்தனர்.
மேலும் ஒவ்வொரு அறைக்கும் 20 பேர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்து உள்ளனர். தேர்வு நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் காலை 9.30 மணிக்கே தேர்வு எழுதும் முதுகலை பட்டதாரிகள் வந்துவிட வேண்டும். வினாத்தாள் அவர்கள் முன்னிலையில்தான் பிரிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு அறையிலும் இதுபோல நடைமுறை பின்பற்றப்படுகிறது.
தேர்வு எழுதுபவர்கள் அவர்களின் பெயர்கள், பதிவு எண்ணை எழுதவேண்டியது இல்லை. அந்த விவரங்கள் அனைத்தும் விடைத்தாளில் ஏற்கனவே அச்சாகி இருக்கும். இந்த முறை முதல் முதலாக ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறைபடுத்துகிறது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேர்வு கமிட்டி தலைவராக செயல்படுவார்கள் என்றும் தேர்வுக்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.