மதுரை வந்தார் சகாயம்!: பீதியில் கிரானைட் கொள்ளையர்கள்!!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ் இன்று மதுரை வந்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினரிடம் ஆலோசனை நடத்திவிட்டு அவர் விசாரணையை தொடங்க உள்ளார். இதனால் கிரானைட் கொள்ளையர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
மதுரை மேலூர், கீழவளவு, இ.மலம் பட்டி, கீழையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 86 கிரானைட் குவாரிகள் சட்டத்திற்குப் புறம்பாக சுமார் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் கிரானைட் கற்களை வெட்டி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த குவாரிகளில் கனிமவள விதியை மீறி 39 லட்சத்து 30 ஆயிரத்து 431 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த கொள்ளைகள் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்திற்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தனக்கு, கனிம வளத்துறையை சேர்ந்த 2 உதவி இயக்குநர்கள், 2 புவியியல் ஆய்வாளர்கள், 2 தாசில்தார்கள் உள்பட 14 பேரை விசாரணைக்கு உதவியாக நியமிக்க வேண்டும் என சகாயம் கேட்டுக் கொண்டார்.
உதவிக்கு அலுவலகர்கள்
இதைத் தொடர்ந்து கனிமவளத்துறையைச் சேர்ந்த 2 உதவி இயக்குநர்கள் முருகானந்தம், சுதர்சன், 2 புவியியல் ஆய்வாளர்கள் பெருமாள், ராஜா, ரமேஷ், துணை கமிஷனர் ஸ்ரீதர், ஓய்வுபெற்ற தாசில்தார்கள் அருணாச்சலம், மீனாட்சிசுந்தரம், விவேகானந்தன் மற்றும் பணியாளர்கள் உள்பட 15 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆவணங்கள் ஒப்படைப்பு
மாவட்ட கனிம வள உதவி இயக்குநர் ஆறுமுக நயினார் நேற்று முன்தினம் கனிம வள முறைகேடு குறித்த ஆவணங்களை சகாயத்திடம் ஒப்படைத்தார்.
மதுரையில் அலுவலகம்
சகாயத்துக்கு மதுரை பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.அலுவலகத்தில், 5 லேப் டாப், ஜெராக்ஸ் மிஷின், மோடம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆய்வு நடத்த வசதியாக 5 வாகனங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பணிகளை துவங்கிய அலுவலர்கள்
இன்று இந்த அலுவலகம் திறக்கப்பட்டு ஆய்வுக் குழுவில் உள்ள துணை ஆணையர், கனிமவள உதவி இயக்குநர்கள் உள்பட பணியாளர்கள் காலையில் பணிக்கு வந்து வேலைகளைத் தொடங்கினர்.
மதுரை வந்த சகாயம்
இந்தநிலையில், சென்னையில் இருந்து கார் மூலம் சகாயம் மதுரைக்கு காலை 11.30 மணிக்கு வந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கலெக்டர் சுப்பிரமணியத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
இதைத்தொடர்ந்து கிரானைட் முறைகேடு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கனிமவள, வருவாய்த்துறை, போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளின் கூட்டத்தை சகாயம் கூட்டினார். இதில் கிரானைட் முறைகேட்டில் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விளக்கினர். இதற்கான கோப்புகளையும் சகாயத்திடம் சமர்ப்பித்தனர். அவற்றை சகாயம் பெற்றுக் கொண்டு ஆய்வு பணியைத் தொடங்கினார்.
துணைக்கு விஞ்ஞானிகள்
இந்த ஆய்வுக்கு தனக்கு உதவியாக அறிவியல் துணை நகரத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளான ஹேமா, தேவசேனாதிபதி ஆகிய 2 பேரை சகாயம் அழைத்து வந்துள்ளார். கிரானைட் மதிப்பு, அதன் தரம், நாட்டின் கனிமவளத்தைச் சுரண்டியதால் ஏற்பட்ட இழப்பு குறித்து அறிக்கை தயாரிக்க இந்த விஞ்ஞானிகள் சகாயத்துக் உதவி புரிவார்கள் எனக் கூறப்படுகிறது.
புகார்கள் மீது நடவடிக்கை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், ''இன்று நான் பல்வேறு துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறேன். எனவே, இன்று பொதுமக்களை சந்திக்கவில்லை. நாளை முதல் பொதுமக்களை சந்திப்பேன். அப்போது அவர்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சூடுபிடிக்கும் விசாரணை
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதியே ஆய்வு பணியைத் தொடங்க சகாயத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. தற்போது கிரானைட் முறைகேடு குறித்து ஆய்வு நடத்துவதற்காக சகாயம் குழுவினர் மதுரை வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில் நிறுவனங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications